|
|
| Poets Bio
|
|
கலாப்ரியா |
"பல வருஷங்களாக கலாப்ரியா கவிதைகள் எழுதி வருகிறார். அவைகளை அவ்வப்போது ஒல்லியான தொகுப்புகளாக அத்தி பூத்தாற்போல் வெளியிடுகிறார்கள். இந்த தொகுப்பு எட்டு வருஷம் கழித்து வருகிறது என அறிகிறேன். கலாப்ரியாவின் கவிதைகளுக்கு எட்டு வருஷம் நிச்சயம் காத்திருக்கலாம்.என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவை தரும் முழுமையான அனுபவப் பங்கீடு , எவொcஅடிஒன் விலையற்றது."சுஜாதாவின் மேற்படி கூற்று உலகெல்லாம் சூரியன் கவிதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து.
எழுபதுகளில் எழுதத் தொடங்கி ,குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தன் சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை ஒளிவு மறைவின்றி பேசும் கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். சின்ன வயதில் எம்.ஜி.ஆர் ரசிகனாய் தி.மு.க தொண்டனாக தீவிரமாக இயங்கும் போது கலாப்ரியாவுக்கு அடித்தட்டு மக்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் பின்னர் கவிதையாய் வெளிப்பட்டிருக்கிறது, பல வேளைகளில் தீவிரமான விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கிறது.
அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்ப) எழுதிய சோமசுந்தரம் ,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.
பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியாவை நா.பார்த்தசாரதி ,தி.ஜானகிராமன், நகுலன் போன்றோர் பாராட்டியிருக்கிறார்கள்.
பாலுணர்வு வெளிபாடுகளும் ,சில வேளைகளில் வன்முறையும் கலாப்ரியாவின் கவிதைகளில் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும் ,இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் அபிப்பிராயப்படுவதுண்டு.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். |
|
|
|
|