இலங்கையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஈஸ்டர் நாளன்று தொடர் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. 45 சிறுவர்கள், 40 வெளிநாட்டவர் உட்பட 277 பேர் கொல்லப்பட்டனர்.
எட்டு மனித வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர விடுதிகள் நாசமாக்கப்பட்டன.
இதுகுறித்து பன்னாட்டு சதி இருப்பதாகக் கூறப்பட்டது. தேசிய தவ்ஹீத் ஜமா அத் எனும் அமைப்பால் நடத்தப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது.
அதிபராக மைத்ரி பால சிறீசேனா இருந்தபோது, இந்த சம்பவம் நடந்ததற்கு கோட்டா பய இராஜபக்சே மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா, பிள்ளையான் தரப்புகள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.
முன்னாள் இணை அமைச்சர் பிள்ளையான் அண்மையில் சிஐடி பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் விஜேபால, ”ஈஸ்டர் தாக்குதல்களுக்கு அவருக்கும் தொடர்பு உண்டு என தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. எந்தக் குற்றவாளியையும் சுதந்திரமாக நடமாட விடமாட்டோம்.” என்று தெரிவித்தார்.
ஈழத்தமிழர்கள் கணிசமாக வசித்துவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பதவியிலும் இருந்த பிள்ளையான், 2006இல் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதற்காக, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.