மகாராஷ்டிர முதல்வரின் நிலையை மத்திய அரசு ஏற்கிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :
” மகாராஷ்டிரத்தில் இந்தியைக் கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காகக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மராட்டி மட்டுமே கட்டாய மொழி எனக் கூறுகிறார் அம்மாநில முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக, மிகப் பரவலாக மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்தப் பேட்டி.
இந்நிலையில், பிரதமரும் ஒன்றிய கல்வி அமைச்சரும் பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்திட வேண்டும்:
தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மகாராஷ்டிரத்தில் மராட்டியைத் தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல எனும் திரு. பட்னாவிஸ் அவர்களின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறதா?
எனில், தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா?
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக அநியாயமாக தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் 2,152 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்குமா? ” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.