கூட்டுறவுத் துறையில் கடன் பெறுவதற்கும் சிபில் ஸ்கோர் கட்டாயம் எனக் கொண்டுவரப்பட்டுள்ளதால், இனி விவசாயிகள் கடன் பெற முடியாது எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
சிபிஐ கட்சி சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மே 26 அன்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை பதிவாளர் அவர்கள் விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி... இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் மதிப்பெண்... பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்கிட வேண்டுமென உத்தரவை பிறப்பித்துள்ளார். ரிசர்வ் வங்கி அண்மையில் புதிதாக பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவு துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறிய நிலையில்.. கூட்டடுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக.. இவரது துறையின் தலைமை அலுவலர் உத்தரவிட்டாரா என அறிய விழைகிறோம்.” என்று கூறியுள்ளனர்.
”வேளாண்மை என்பது இயற்கையை சார்ந்த தொழிலாகும். விவசாயிகள் தன் மூலதனத்தை வெட்ட வெளி நிலத்தில் போட்டுவிட்டு... இயற்கை பேரிடர்கள்.. பருவ கால மாறுபாடுகள்.... இடுபொருள்களின் மாற்றங்களினால் ஏற்படும் பயிர் வளர் நிலை இடர்களை எல்லாம் தாண்டி.. பல மாதங்கள் காத்திருந்து... போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கும் வரை... இவர்கள் மட்டுமல்ல.. இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் படும் துன்பங்கள் மாளாது.
இப்படியான பாதிப்புகள் மிக கூடுதலாகி வரும் நிலையில்... சிபில் ஸ்கோர் தகுதியைக் அளவீடாக கொண்டு விவசாயிகள் கடனை தீர்மானிக்க கூடாது. கடன் பெற்றோர் அக்கடனை திருப்பி செலுத்திய முறைகளை கணக்கீடாக கொண்ட சிபில் ஸ்கோர் மதிப்பெண்களின் அளவீடு தான்.. விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியாக கொண்டு தீர்மானிக்கப்படும் என்றால் பெரும்பகுதி விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது. வணிக வங்கிகளில் நடைமுறைகளில் உள்ள இம்முறை இப்போது கூட்டுறவுத்துறையிலும் அமல்படுத்தப்படுகிறது.
வேளாண்மை தொழிலை புரிந்து கொள்ளாது... குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து.. எந்த இடர்கள் நாட்டில் வந்தாலும்.....தன் வருமானத்தில் பங்கம் இல்லாமல் இருக்கிற உயர் அலுவலரின் எதார்த்தமற்ற சிந்தனைகளால் வந்த அறிவிப்பாகும் இது.
வேளாண்மையில் ஏற்படும் இழப்பீட்டை சிபில் ஸ்கோர் அளவீட்டில் கணக்கிட்டு நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டத்தை முதலில் அமல் படுத்தினால்.. விவசாயிகளின் வாழ்வு தகுதியும் சிபில் ஸ்கோர் வரம்பில் வந்துவிடும். இப்படியான நெருக்கடிகள் தீராத நிலையில்.. வேளாண்மை கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் அளவீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, முதல்வர் தலையிட்டு வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையைக் கைவிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.