மகாத்மா காந்தி நூறு நாள் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் தொடர்ச்சியாக வஞ்சித்துவரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து இம்மாதம் 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து 25.03.2025 அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தரவில்லை என்பதைக் குறிப்பிட்டதுடன்,
”தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை அன்று காலை கட்சியின் அனைத்து ஒன்றிய அமைப்புப் பகுதிகளிலும் தலா இரண்டு இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.
”மாவட்ட நிர்வாகிகள் - தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்ய வேண்டும். தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டும்.” என்றும் துரைமுருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.