தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; சினிமா வசனம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ள மவுனம் சாதிக்கிறார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைகூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை வைத்து இன்றுவரை அரசியல் செய்யும் தி.மு.க., தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?” என்று கேட்டுள்ளார்.
" தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்காது" என்று சினிமா வசனம் பேசிய உதயநிதி, இத்தனை மரணங்களுக்கும் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? ’வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்கவேண்டும்’ என்று சொன்னீர்களே- அவை கொஞ்சமாவது உங்களுக்கு இருந்தால் தொடரும் நீட் மரணங்களுக்குப் பொறுப்பேற்று, உங்களால் ஏமாற்றப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களிடம் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கோரவேண்டும்.
தொடரும் நீட் மரணங்களைத் தமிழ்நாடு தாங்காது! நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியாவது இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இனியேனும் மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.