பிரச்னை முற்றுகிறது - கனடாவில் இந்திய விசா வழங்கல் நிறுத்தம்!
கனடா நாட்டில் இந்திய விசா வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவரான நிஜ்ஜார் கடந்த ஜூன் 18ஆம் தேதி காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அதில் இந்தியத் தரப்பின் கை இருப்பதாக இந்த வாரம் திங்களன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ குற்றம்சாட்டினார்.
முன்னதாக, ஜி20 மாநாட்டிலும் பிரதமர் மோடியிடம் இதுகுறித்து அவர் பேசியதாகவும் ஆனால் மத்திய அரசு அதை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது என்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறினர். இதனிடையே இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராய் என்பவரை கனடா அரசு அங்கிருந்து வெளியேற்றியது. அதற்குப் பதிலடியாக கனடிய அதிகாரி ஒருவரை இந்திய அரசும் வெளியேற்றியது.
இரு நாடுகளுக்கும் இடையே அரசுரீதியாக உரசல் அதிகரித்துவரும் நிலையில், இன்று மீண்டும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி கனடாவில் கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, கனடாவில் உள்ள விசா வழங்கும் மையத்தின் சார்பில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை இந்தியா செல்வதற்கான விசா நிறுத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.