டி20 - தொடரைக் கைப்பற்ற இந்திய, மேற்கிந்திய அணிகள் மும்முரம்!

அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் ஜெய்ஸ்வால்
அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் ஜெய்ஸ்வால்
Published on

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுவரை நடந்துள்ள போட்டிகளில், இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளன. இன்று இரவு நடைபெறவுள்ள கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இரு அணிகளும் மும்முரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி வென்றது.

நேற்று இரவு, நான்காவது போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை குவித்தது, மேற்கிந்தியத் தீவுகள் அணி.

அதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால்,சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து நன்றாக விளையாடிய இந்திய அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்று சமனில் உள்ள நிலையில், இன்று இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றி கோப்பையைத் தட்டிச்செல்லும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com