தூத்துக்குடி மீட்புப் பணியில் அமைச்சர்கள் நேரு, கீதா ஜீவன், அரசுச்செயலர் கார்த்திகேயன்
தூத்துக்குடி மீட்புப் பணியில் அமைச்சர்கள் நேரு, கீதா ஜீவன், அரசுச்செயலர் கார்த்திகேயன்

வெள்ளம்- தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம்... பகுதிவாரியாக அமைச்சர்கள், அதிகாரிகள் பொறுப்பு!

பெருமழை வெள்ள பாதிப்புகளில் மீட்பு உதவிப் பணிகளுக்காகதூத்துக்குடி மாவட்டத்தில் பகுதிவாரியாக அமைச்சர்கள், உயர் அதிகாரிகளைப் பொறுப்பில் அமர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்த அரசுச் செய்திக்குறிப்பு விவரம்:

“திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை முதல் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,  கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பொன்னையா,

சாத்தான்குளம் – காயல்பட்டினம் பகுதிகளுக்கு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி மற்றும் பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர்
கார்த்திகேயன்,

தூத்துக்குடி மாநகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், செனை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஆல்பி ஜான்,

இவர்களுடன் கூடுதலாக சிறப்பு முயற்சிகள் செயலாக்கத் துறை செயலாளர் தாரேஷ் அகமது, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருடன் இணைந்து மீட்பு, நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்குதல், வெள்ளத்தால் சூழ்ந்துள்ளோரை மீட்கும் பணியினை ஒருங்கிணைக்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர்
குமார் ஜயந்த் மதுரையிலிருந்தும்,  பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, அம்மாவட்டங்களுக்கு சென்று பணியாற்றவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அத்துடன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் - கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா ஆகியோர் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com