ட்விட்டர் ஸ்பேசஸ் நிகழ்வில் ஸ்டாலின்
ட்விட்டர் ஸ்பேசஸ் நிகழ்வில் ஸ்டாலின்

அமித்ஷா சொன்ன ஜூம்லா- தி.மு.க.வினருக்கு ஸ்டாலின் கட்டளை!

தி.மு.க. தகவல்நுட்ப அணியின் சார்பில் இந்த மாதம் ட்விட்டர் ஸ்பேசஸில் திராவிட மாதம் என அன்றாடப் பேச்சரங்கம் நடத்தப்பட்டது. நிறைவாக இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அப்போது, “ பாட்காஸ்ட்டில் இந்தியாவுக்காகப் பேசுவோம் - எபிஸோட் 1 & 2, இதுவரை பல லட்சம் பேரால் கேட்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பத்து, பதினைந்து மாநாடு நடத்தியதற்குச் சமம்.” என்று அவர் பெருமிதம்பொங்கக் குறிப்பிட்டார்.

”மாநாடு என்றால் நம்முடைய ஆட்கள்தான் பெரும்பாலும் வருவார்கள். ஆனால், நம்மை எதிர்ப்பவர்கள்கூட, இதைக் கேட்கிறார்கள். இதன் மூலமாக வீண் வெறுப்பிலும் – பொய்களை நம்பி அறியாமையிலும் இருக்கும் அவர்கள், உண்மைகளைப் புரிந்துகொண்டு மனம் மாறுவார்கள்.” என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.

முக்கியத்துவம் வேண்டாம்

தொடர்ந்து பேசுகையில், ”சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஆதரித்து – வெறுப்பை விதைக்கும் பா.ஜ.க.வால் அதன் கொள்கையை தமிழ்நாட்டில் பேச முடியாது. அ.தி.மு.க.விற்குக் கொள்கை என்ற ஒன்றே கிடையாது. எந்தப் பிரச்சினைகளிலும் கொள்கை சார்ந்த நிலைப்பாடு கிடையாது. அதனால், அவர்கள் நாள்தோறும் நம்மைப் பற்றி அவதூறு பரப்புவார்கள். அதற்கெல்லாம் யாரும் முக்கியத்துவம் தராதீர்கள்.

மக்கள் தங்களை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்கள் என்று உணர்ந்துவிட்டாலே கூலிகளுக்குப் பதற்றம் வந்துவிடும். என்னதான் கத்தினாலும், சீண்டினாலும் தி.மு.க.காரர்கள் நம்மை கவனிக்கவில்லையே என்று அடிமைக் கும்பலுக்கு விரக்தி வந்துவிடும்.

அண்ணா, மருதமலை...

இப்போதுகூட, பேரறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டார் என்று ஒரு செய்தியைப் பரப்பினார்கள், அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று இந்து ஆங்கில நாளிதழே மறுத்துவிட்டது.

அடுத்து, மருதமலை கோயிலுக்கு, தி.மு.க. ஆட்சி மின் இணைப்பு தரவில்லை என்று பரப்பினார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு 5 வருடத்திற்கு முன்பே மருதமலை கோயிலில் மின் இணைப்பு வந்துவிட்டது என்று கல்வெட்டு ஆதாரம் காட்டி இருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் பதிலா?

பா.ஜ.க.விற்குப் பொய் சொல்வது எந்த அளவிற்கு பழக்கம் ஆகிவிட்டது என்றால், பிரதமர் தொடங்கி ஒன்றிய அமைச்சர்கள் பலரும் பொய்களை உண்மை என்று நினைத்து நாடாளுமன்றத்திலேயே பேசுகிறார்கள். இவ்வாறு அவர்கள் பொய் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். நாம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா? நமக்கு ஆக்கப்பூர்வமான நிறைய வேலை இருக்கிறது.

எதிர்காலத்தில் தமிழ்நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் எதிர்த்து நாம் போராடியாக வேண்டும். எவ்வாறு, நீட் தேர்வின் அபாயத்தை முன்பே உணர்ந்து, நாம் போராட ஆரம்பித்தோமோ, அவ்வாறு நிறைய வேலைகள் நமக்கு இருக்கிறது.

‘டைவர்ஷன் பாலிட்டிக்ஸ்’

கள்ளக்கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் பரப்பும் பொய்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு. ஆனால், நம்முடைய கொள்கைகளுக்கு வலிமை அதிகம்!

பா.ஜ.க.வின் பொய் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக, கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல், பா.ஜ.க. பம்மாத்து செய்துகொண்டு இருக்கிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.

‘டைவர்ஷன் பாலிட்டிக்ஸ்’தான் அவர்களின் ஆயுதம். உண்மையான பிரச்சினைகளைப் பற்றி எப்போதுமே பேச மாட்டார்கள். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் பற்றி, திரும்ப திரும்பப் பேசிப் பிரச்சினையாக ஆக்குவார்கள். அதற்கு சில ஊடகங்களும் துணை செல்லும். இதைக் கரெக்ட்டாகப் புரிந்துகொண்டாலே போதும்!

படம் காட்டிய மோடி

‘சந்திராயன் விட்டோம். ஜி-20 மாநாடு நடத்தினோம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி படம் காட்டிக்கொண்டு இருக்கிறார். அவர் இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது என்று நினைவூட்டி, அந்த வீடியோக்களை அதிகம் பரப்புங்கள்.

அமித்ஷாவின் ஜூம்லா

‘ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு, ரூபாய் 15 லட்சம் கொடுப்போம்’ என்று பிரதமர் மோடி சொன்னதையும் – ‘அதெல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காக சொன்ன ஜூம்லா என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதையும் அதிகமாகப் பரப்புங்கள்.

பிரதமரிடம் கேளுங்கள்

“இந்திய மகள்களுக்காக இப்போது உருகுகிற மாதிரி நடிக்கும் பிரதமர் அவர்களே! மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டப்போது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மணிப்பூருக்குப் போய் பாதிக்கப்பட்டவர்களைப் பாத்தீர்களா?” என்று கேள்வி எழுப்புங்கள். “மல்யுத்த வீராங்கனைகள் பா.ஜ.க. எம்.பி. மேல் சொன்ன பாலியல் புகார், பல மாத காலமாகப் பிரதமர் காதில் விழாமல் போனது ஏன்?” என்று கேள்வி எழுப்புங்கள்.

பா.ஜ.க.வின் கடந்த காலத் தவறுகளை சமூக வலைத்தளங்களில் திரும்பத் திரும்ப நினைவூட்டி பிரச்சாரம் செய்யுங்கள். இதைச் சரியாக செய்தாலே, நாற்பதும் நமதாகும்! நாடும் நமதாகும்!” என்று ஸ்டாலின் தன் பேச்சில் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com