தி.மு.க. மா.செ.கள் காணொலிக் கூட்டம்
தி.மு.க. மா.செ.கள் காணொலிக் கூட்டம்

மும்முரமாகும் திமுக தேர்தல் பணி- ராமநாதபுரத்தில் 17-ம் தேதி அடுத்த பயிற்சி!

திமுகவின் அடுத்த தேர்தல் பயிற்சிப் பாசறைக் கூட்டம், வரும் 17ஆம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் காணொலிவாயிலாக இன்று மாலை நடைபெற்றது.

நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகளின் விவரங்களை துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா விவரித்தார்.

நிறைவாகப் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,

” கட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஆண்டுதோறும் நம்மை தலைவர் கலைஞர் எப்படி உணர்ச்சி கொள்ள வைத்தாரோ - அதுபோல கலைஞர் நூற்றாண்டு விழாவையும் ஆண்டு முழுவதும் நடத்தி கட்சியை எழுச்சிபெற வைக்க வேண்டும்.

அரசு சார்பிலும் விழாக்கள் நடத்தப் போகிறோம். அரசு சார்பில் நடத்துகிற நிகழ்ச்சிகளுக்கான பரிந்துரைகள் வந்திருக்கிறது. மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள்.

ஒன்றிய – நகர – பேரூர் - பகுதி அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளிடம் கலைஞர்-100 நிகழ்ச்சி பற்றி பேசுங்கள். நிர்வாகிகள் உற்சாகத்தோடு பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளர்களுக்குத்தான் இருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு விழாவும் தேர்தல் பரப்புரையில் ஒரு அங்கம்தான். தலைவர் கலைஞர் பெயரைச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை நம்மை நோக்கி ஈர்த்தாக வேண்டும். மக்களை ஈர்க்க கலைஞரே காந்தம்போல் நமக்கு உதவுவார். அவரால் பயன்பெறாத தரப்பினரே இல்லை. அதனால், அந்த அடிப்படையில் கொள்கை விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்களின் தீவிரமான களப்பணிதான் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். நம் வியூகத்தை வெற்றியடையச் செய்வது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. எனவே, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நியமனம் மற்றும் அவர்கள் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்த, முதல் கட்டமாக, டெல்டா மாவட்டங்களுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தை திருச்சியில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். அது, அந்த மாவட்டச் செயல்வீரர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரையுமே உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது.

வரும் 17-ஆம் தேதி தென் மண்டல மாவட்டங்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கூட்டங்களை நடத்தி அவர்களை அழைத்து வருவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

இன்னொன்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பாசறைக் கூட்டங்களை நடத்துவதோடு நம்முடைய வேலை முடிந்துவிடாது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையின் தொடக்கம் மட்டும்தான் அது!

அதனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடுத்த கட்ட பணிகளையும் தொடங்க வேண்டும். கட்சியின் சாதனைகள், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான கருவியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு நூறு வாக்காளருக்கும் ஒரு பொறுப்பாளர் என்று வாக்குச்சாவடி குழு உறுப்பினர் (BLC) நியமனம் செய்கிற பணியும் எல்லா மாவட்டங்களிலும் நிறைவடைந்திருக்கிறது.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களைப் போலவே, எல்லா வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களையும் தலைமைக் கழகத்திலிருந்து அழைத்து சரிபார்க்கிற பணியை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறேன். சரிபார்ப்புக்குப் பின், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களில் (BLC) ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அதையும் செய்து முடித்து, எல்லா வாக்குச்சாவடிகளிலும் BLA2, BLC பணிகளை முழுமையாக முடித்து அவர்களுக்கான அடுத்தடுத்த பணிகளை தொடங்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி குழுவிலும் தங்களுக்குரிய முரண்பாடுகள் எதுவும் இல்லாமல், ஒற்றுமையாக வேலை செய்கிற வகையில் எல்லா செயல்பாடுகளும் இருக்கவேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் பாசறைக் கூட்டம் முடிந்துவிட்டதால், அந்த மாவட்டங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக நூறு வாக்காளர்களைப் பிரிக்கிற பணி, வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை சரிபார்க்கும் வேலையை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பாஜகவை பொறுத்தவரையில் இது அவர்களுக்கு வாழ்வா சாவா - என்ற தேர்தல்! மீண்டும் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கிறது. அதனால் கோபம் அதிகமாகும். நம்மை நோக்கிப் பாய்வார்கள்.

கடந்த காலங்களில், இதுமாதிரி பல தடைகளை சமாளித்துத்தான் நம்முடைய கழகம் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த முறையும் நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்! அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.” என்று ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com