தெரசா
தெரசா அந்திமழை

கருத்துக் கணிப்புகளும் திணிப்புகளும்

ஸ்வீடனில் இருந்து

இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக்-கொண்டிருக்கும் இந்த வேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புகளும் வாக்குப் பதிவிற்குப் பிந்தைய கணிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. 

கடந்த 10 - 20 ஆண்டுகளிலேயே இணைய வசதிகள் பெருகியதன் விளைவில், சமூக ஊடகங்கள் அவரவர் கைகளில் எந்நேரமும் தவழத் தொடங்கியப் பிறகு, தேர்தலுக்கு முன்பே நம் மக்கள் மீது பல்வேறு சிந்தனை ஊடுறுவல்களும் சிந்தனை மடைமாற்றங்களும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை, கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதில் எக்கட்சிகளும் சாராத தனியார் நிறுவனங்களின் கைகளே ஓங்கி உள்ளது. மக்களின் நம்பிக்கையும் இவர்களின் செயல்பாடுகளில் மட்டுமே தங்கி உள்ளது. பெரும்பாலுமான அரசியல் கட்சிகளே கூட, இத்தகைய தனி நிறுவனங்களிடம் இருந்தே தகவல்களை விலைகொடுத்தும் வாங்கியே தங்கள் பிரச்சாரப் பயணத்தை மாற்றிக்கொள்வர். நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் பெரும்பாலும் கருத்துக் கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பெரிய இடைவெளி இருப்பதில்லை. என்ற பொழுதிலும், இங்கே எல்லாம் இந்திய ஒன்றியத்தைப் போன்று அரசியல் கட்சிகள் சார்ந்த செய்தித் தொலைக்காட்சிகள் கருத்தைத் திணிப்பதில்லை என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

அதேவேளை, மேற்கத்திய நாடுகளிலும் கூட, வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம் பொது மக்களின் பார்வையும் கருத்தும் மாற்றம் கொண்டவையே! ஆதலால், கருத்துக் கணிப்புகள் தொடர்ச்சியாக பல மாதங்கள், வாரா வாரம் நடத்தப்படுவதும் உண்டு. இறுதி நேரக் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலுமான ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் முடிவுகளோடு பொருந்தி வந்தாலும், சில வேளைகளில் மாற்றங்களும் சூழலைப் பொருத்தும்
சர்வதேச அரசியல் மாற்றங்களைப் பொருத்தும் மாற்றம் காண்பதுண்டு.

இவை தேர்தல் காலத்திற்கு மட்டுமல்ல, தேர்தல்களுக்கும் அப்பாற்பட்டு, பல்வேறு பொதுவாக்கெடுப்புகளின் போதும் கருத்துக் கணிப்புகளுக்கும் வாக்கெடுப்பு காலத்திற்குமான  முடிவுகள் மாற்றம் கொண்டவையே! உதாரணத்திற்கு, அணுசக்தி கொள்கை குறித்த பொதுவாக்கெடுப்பு காலங்களில், ஜப்பான் அணு உலை விபத்து நடந்த காலத்திற்கும் ஒரு வாரம் முன்பு ஒருவேளை கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டு, பொதுவாக்கெடுப்பு அணு உலை விபத்து காலத்திற்கு பின்பு நடத்தப்பட்டால் முடிவு மாறியிருக்கும்!

பிரித்தானியாவின் பொதுவாக்கெடுப்பும் கருத்துக் கணிப்புகளும்:

அதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் தொடர்பாக 2012இல் இருந்தே தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 2015 தேர்தலின் போதுகூட, தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமாயின் கட்டாயமாக பிரித்தானிய வெளியேற்றம் குறித்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அன்றையப் பிரதமர் டேவிட் காம்ரூன் வழங்கினார், வெற்றியும் பெற்று மீண்டும் பிரதமரானார். தன் நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகக்கூடாது என்பதாகவே இருக்கும் எனவும், பொதுமக்களின் கருத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுப்பதாகவும் கூறினார்.

டிசம்பர் 2015இல் நடந்த கருத்துக் கணிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை பொதுமக்கள் பெரும்பாலோர் விரும்பவில்லை என்ற தகவல்களே உறுதியானது. ஆனால், 6 மாதத்தில் நடந்த பொதுவாக்கெடுப்பில் பிரித்தானியாவின் வெளியேற்றத்திற்கு ஆதரவாகவே 51% மக்கள் வாக்களித்தனர். இருப்பினும், தன் நோக்கமும் தன் மக்களின் நோக்கமும் வேறாக இருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பதும் கூடுதல் செய்தி.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் குறித்தான சட்டவடிவிலான ஒப்பந்தங்கள் நிறைவு செய்யப்படாமல் பல்வேறு காரணிகளால் இழுத்தடிக்கப்பட்டு வரும் இன்றைய நிகழ்காலச் சூழலில், பிரதமர் தெரசா மே அவர்களின் செயல்பாட்டில் நம்பிக்கை இழந்த பெரும்பாலோர், தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் கருத்துக் கணிப்பில் பிரித்தானியாவின் வெளியேற்றத்தை விரும்பாமல் திசை திரும்பி வருகின்றனர் எனவும் அறிய முடிகிறது.

ஒரே காரணம், ஒரே நிலம், ஒரே கோரிக்கை, ஒரே சூழல், ஆனால், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களால் மக்கள் எப்படி நிலைப்பாடுகளில் மாற்றம் கண்டு வருகின்றனர் என்பதற்கான உதாரணமாகவே இதனைக் கணக்கிடலாம்.

அத்துடன் இந்த வருடம் ஜனவரியில் 40% ஆதரவு வாக்கினைப் பெற்ற தெரசாவின் கட்சி தற்பொழுது ஏப்ரல் இறுதியில் 26% ஆதரவு வாக்குகளிலேயே பெற்றிருக்கிறது. இப்படி, வாராவாரம் தொடர்ந்து பல மாதங்களாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் நிகழ்கால அரசியல்வெளியினை பிரதிபலிக்கும் விதத்தில் நடத்தப்படுவதால், எந்தச் சூழலில் எந்த நடவடிக்கைகளால் மக்கள் மனமாற்றம் பெறுகின்றனர் என்பதனை அரசியல் கட்சிகளும் அறிந்து கொள்கின்றன.

ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பும் கருத்துக் கணிப்புகளும்:

ஸ்காட்லாந்து தனிநாட்டிற்கான பொதுவாக்கெடுப்பு 2014 செப்டம்பரில் நடக்கும் முன், ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு கருத்துக் கணிப்புகளை பல தனியார் நிறுவனங்கள் நடத்தின. குறைந்தது 1000த்தில் இருந்து 2000 வரையிலுமான மக்களிடம் கணிப்புகள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 9 மாதங்களில் மாதம் 4 - 5 கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு, தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஆதரவு வாக்குகள் முதலில் 28% எனத் தொடங்கி செப்டம்பர் மாத வாக்கில் 42&45% வரையென உறுதியானது.  இடைப்பட்ட காலத்தில் இருவேறு தருணங்களில் தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஆதரவு வாக்கு 47% வந்ததோடு எதிர்ப்பு வாக்குகளைவிட அதிகமாகின.

பொது வாக்கெடுப்பில் இறுதியாக தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிராக 55% வாக்குகளும் தனிநாட்டிற்கு ஆதரவாக 44.7% வாக்குகளும் கிடைத்தன. கருத்துக் கணிப்பைப் பொருத்தவரை ஆதரவு வாக்குகள் என நிர்ணயிக்கப்பட்ட வாக்குகள் அப்படியே கிடைத்தன. முடிவு இறுதியாகவில்லை என கூறிய 5% வாக்குகள் அப்படியே தனி நாட்டுக் கோரிக்கைக்கு எதிராக விழுந்தன. ஒருவேளை, மாறி ஆதரவு வாக்கில் விழுந்திருந்தால், இந்நேரம் ஸ்காட்லாந்து தனி நாடாகி இருக்கும்.

ஆனாலும் விடாமுயற்சியாக  கடந்த 5 வருடங்களாக ஒருவேளை, இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடக்குமாயின், அதில் ஸ்காட்லாந்து மக்களின் நிலை என்னவாக இருக்கும் என தொடர் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையில் முன்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பொது வாக்கெடுப்புச் செய்தியினைக் குறிப்பிடக் காரணமில்லாமல் இல்லை. ஒருவேளை, விரைவில் பிரித்தானியா வெளியேற்றம் குறித்த முறைப்படியான
சட்டவடிவிலான அறிவிப்பு வந்துவிட்டால், ஸ்காட்லாந்து மக்களின் தங்கள் நாட்டு விடுதலை குறித்தான எண்ணவோட்டத்திலும் மாற்றம் வரும் எனவும், தொடர்ந்து நடந்து வரும் கருத்துக் கணிப்புகள் பிரித்தானிய வெளியேற்றம் தொடர்பான அறிவிப்புகளை ஒட்டி பெரிய அளவிலான மனமாற்றத்தையே காட்டி வருவதாகவுமே பல்வேறு செய்திகள் வழியே அறியமுடிகிறது.மார்ச் 2019இல் நடந்த கருத்துக் கணிப்பில் 60% ஸ்காட்லாந்து மக்கள் தங்கள் நாட்டு விடுதலையை விரும்புவதாகத் தெரிகிறது.

ஒபாமா தேர்வும் கருத்துக் கணிப்புகளும்
ஒபாமா தேர்வும் கருத்துக் கணிப்புகளும்அந்திமழை

ஒபாமா தேர்வும் கருத்துக் கணிப்புகளும்

அமெரிக்கா ஐக்கிய குடியரசுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பினத்தவரை தேர்ந்தெடுப்பீர்களா? என அமெரிக்கர்களிடம் 1958 முதலே கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது. 1958இல் 53% மக்கள் ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பினத்தவரை தேர்ந்தெடுக்கமாட்டோம் என்றவர்கள் 2007இல் 3% ஆகக் குறைந்திருந்தனர். 1983இல் கலிஃபோர்னியா மாகாண கவர்னருக்கான தேர்தல் கருத்துக் கணிப்பில், கறுப்பினத்தவரான டோம் பிராட்லி 9&22% முன்னிலை வாக்குப் பெறுவார் என்ற முடிவுகளுக்கு மாறாக தேர்தலின்போது தோற்றும் இருக்கிறார். இத்தகைய போக்கு பல மாகாணத் தேர்தல்களிலும் கருத்துக் கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது.

2007இல் இருந்தே ஒபாமா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கருத்துக் கணிப்புகள் தொடங்கின, பெரும்பாலுமான முடிவுகள் ஒபாமாவிற்கே சாதகமாக அமைந்திருந்தாலும் 2 - 3% முன்னிலையே பெற்றுவந்தார். பெரும்பாலும் 42 - 47% வாக்குகளும் 5 - 10% மக்கள் முடிவு செய்யவில்லை எனவுமே கருத்துக் கணிப்பின் பொழுது தெரிவித்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகளில் 52.9% ஒபாமா பெற்று வெற்றி பெற்றார்.

அதேபோல, 2012 தேர்தலைப் பொறுத்தவரை, செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பலக்கட்டக் கருத்துக் கணிப்பில் ஒபாமாவே முன்னிலை பெற்று வந்தாலும் அவ்வப்பொழுது ரோம்னிக்கும் முன்னிலை கிடைத்து வந்தது. கருத்துக்கணிப்புகளின் பொழுது 45% முதல் 48% வரையிலான வாக்கினையே இரு தரப்பும் பெற்றுவந்தது, வாக்கு வித்தியாசம் பெரும்பாலுமான நேரங்களில் 3 - 5% என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 2012இல் நடந்த தேர்தலில் ஒபாமா 51.1% வாக்குகளும் ரோம்னி 47.2% வாக்குகளையும் பெற்றிருந்தார். 2010 முதலே நடந்த கருத்துக் கணிப்புகளில் ஒபாமா 50%த்தை தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2008 தேர்தலுக்கும் 2012தேர்தலுக்கும் கருத்துக்கணிப்பில்
சிறு வேறுபாட்டை உணரலாம். 2008 தேர்தலில் கருத்துக் கணிப்பின்படி ஒபாமாவே வெல்வார் என்ற முடிவுகள் கிடைத்தாலும் இறுதியான
 சதவீதம் கருத்துக் கணிப்பை விட மாறியிருந்தது. 2012 - ல் பெரும்பாலுமான கருத்துக் கணிப்பு முடிவுகள் இறுதி முடிவுக்கு பெருமளவு பொருந்தியிருந்தன.

இங்கெல்லாம் தேர்தல் அன்றுதான் அனைவரும் ஓட்டுப் போடவேண்டும் என்றில்லை. தேர்தல் நாளுக்கு 20 - 30 நாட்கள் முன்பே நகரத்தின் மையப் பகுதிகளிலோ, மாநகராட்சி கட்டங்களிலோ வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய தேர்தல் நாளுக்கு முந்தைய வாக்குப்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த வருடங்களில் 6%இல் இருந்து 10% வரை பதிவாகின்றன என்றும், அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் அதிகமாகுமெனவும் தெரிகிறது. நவீன சமூக ஊடக உலகில் உடனுடக்குடன் செய்திகள் வேகமெடுத்துப் பரவிவரும் சூழலில், பல்வேறு சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புள்ள சூழலில் தேர்தல் வாக்குப்பதிவுகள் தொடர்ந்து நடக்கும் 20 - 30 நாட்களில் பதிவாகும்  10%வரையிலான வாக்குகள் மற்றும் தேர்தல் அன்று பதிவாகும் வாக்குகளில் வேறுபாடுகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

மே, 2019.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com