அப்ப்ப்பா அங்கிள் நல்லா பேசினான்..!

அப்ப்ப்பா அங்கிள் நல்லா பேசினான்..!

இசை விழா குறிப்புகள்

சென்னை திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக நிலையமும் அந்திமழை மாத இதழும் இணைந்து  ஏற்பாடு செய்திருந்த ஒரு வார இசைவிழாவில் ரசித்தவை:

 “இசை கேட்கப்படுவதற்காக. ரசிக்கப் படுவதற்காக. இசை பற்றிய ஆய்வுகளும் கருத்தரங்குகளும் செய்யப் படவேண்டியது ஒரு சமூகத்தின் கடமை. அந்த சமூகத்தின் தத்துவம், சிந்தனை முறை, சமய கருதுகோள்கள் ஆகியவையே அச்சமூகத்தின் இசை வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. கலை என்பது ஒரு கண்ணாடி. சமூகம் தன்னைத் திரும்பிப் பார்க்க உதவக்கூடியது. அதற்கு இதுபோன்ற ஆய்வரங்குகள் தேவை” என மிக கனமான கருத்துடன் இசைக் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார் ராமானுஜன் படத்தின் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம். வெகுநேரம் அமர்ந்திருந்து மற்றவர்கள் பேச்சையும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைத் துறைப் பேராசிரியர் பிரமீளா குருமூர்த்தி ஒரு இசை ஒலிப்பானையும் கொண்டுவந்திருந்தார்.

சிதம்பரம் ஜெயராமனின் திரை இசைச் சிறப்புகள் பற்றிப் பேசினார். இலங்கையில் கொழும்புவில் வாழ்ந்த குடும்பம் பிரமீளாவுடையது. அவரது அப்பா புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர். இலங்கைக்கு 1967ல் சிதம்பரம் ஜெயராமன் வந்தபோது இவர்கள் வீட்டில் அவரைப் பாட வைத்தார்கள். சுமார் 150 பேர் வந்திருந்தார்கள். மிக அருமையாக நிகழ்ந்தது கச்சேரி. அப்போது சுவர் ஏறிக் குதித்து ஒருவர் உள்ளே வந்துவிட்டார். அவரைப் பிடித்து விசாரித்தால், ’குற்றம் புரிந்தவன் வாழ்விலே நிம்மதி என்பதேது?’ என்ற பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதைக் கேட்க வந்தானாம். ( அதற்காக சுவர் ஏறிக்குதிக்கும் குற்றம் புரிந்தானா? என கமெண்ட் அடித்தார் ரமேஷ் விநாயகம்).

அருட்தந்தை அமலதாஸ் கிறிஸ்துவ இசை என்ற தலைப்பில் பேசவந்தார். இசைக்கு மதமோ மொழியோ இல்லை. அதை வெறும் இசையாகப் பாருங்கள். கிறிஸ்துவ கத்திரிக்காய், இந்து தேங்காய் என்று எதும் இல்லை என்பதுபோல இசையிலும் எந்த பிரிவினையும் இல்லை என்று வலியுறுத்தினார்.

முனைவர் பார்த்திபராஜா ஸ்பெஷல் நாடகங்களில் இசை என்ற தலைப்பில் மிக அருமையான தகவல்களுடன் உரை நிகழ்த்தினார். அரிச்சந்திரா நாடகப் பாடல்களை அவர் பாடுகையில் அவரது குரல்வளம் ஆச்சரியப்படுத்தியது. ‘வள்ளித் திருமணத்தில் தினைபுனம் காக்கும் வள்ளியும் அங்கே மான் வந்ததா எனக்கேட்கும் முருகனும் பாடித் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். வள்ளியாக நடிப்பவர் மான் வரவே இல்லை என்று சாதிப்பார். உன் மானின் அடையாளம் என்ன என்று அவர் கேட்டால்தான் முருகனாக நடிப்பவர் காயாத கானகத்தே.... பாடமுடியும். பல இடங்களில் இரவு முழுக்க வள்ளி மானின் அடையாளம் என்ன என்று கேட்கவே மாட்டார். முருகன் படாத பாடுபடுவார். கடைசியில் விடிந்துவிடும் நிலையில்தான் வள்ளி போனால்போகட்டும் என்று மானின் அடையாளம் கேட்பார்...’

‘ஹார்மோனியம் வைத்துப்பாடும் கலைஞர்களும் புகழ்பெற்று விளங்கினர். பரமேஸ்வர ஐயர், கமலவேணி அம்மா, டி.எம்.காதர் பாஷா ஆகியோர் குறிப்பிடவேண்டியவர்கள். இதில் காதர் பாஷா பற்றி ஒரு சுவாரசியமான வாய்மொழித் தகவல் உண்டு. அவரது தேசபக்திப் பாடல்களால் கோபமடைந்த ஆங்கிலேயர் அவரை பொய்க்குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைத்து தூக்குத் தண்டனை வாங்கித் தந்தனர். தூக்கில் போடுவதற்கு முன்னால் கடைசி ஆசை என்ன என்று கேட்டனர். ஹார்மோனியம் கொண்டு இசைத்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்றார். கொடுக்கப்பட்டது. சுருளிமலை மேல் உலாவும் சூலா என்ற பாடலைப் பாடினார். அவர் பாடப்பாட அனைவரும் மெய்மறந்தனர். தூக்குப்போட வேண்டிய நேரம் கடந்துவிட்டது. எனவே அவரை மீண்டும் நீதிபதியிடம் ஆஜர் செய்து மறு தூக்குக்கு நேரம் கோரினர்.

நீதிபதி தூக்கில் போடாததன் காரணம் வினவினார்.

சொல்லப்பட்டது. தனக்கு அந்த பாடலைப் பாடிக்காட்டச் சொன்னார். கூண்டில் இருந்த வண்ணம் பாஷா இசைத்துப் பாடினார். நீதிமன்றமே உருகி வழிந்தது. இவ்வளவு உருகிப் பாடும் இவர் குற்றவாளியாக இருக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.”

பார்த்திபராஜா பேசி முடித்ததும் பார்வையாளர்கள் நடுவில் இருந்து ஒரு மூன்று வயது மழலைப் பையன்... ‘அப்ப்ப்ப்பாஆ.. அங்கிள் நல்லா பேசினான்...’ என்று உரக்க தன் அபிப்ராயத்தை வெளிப்படுத்தினான். இதுதான் மிகச்சிறந்த பாராட்டு என நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் இசை ஆய்வாளர் மம்மது பெருமை அடைந்தார்.

மம்மதுவின் பேச்சில் வழக்கம்போல ஆழமான கருத்துகள், சூடான விமரிசனங்கள். அருமையான பாடகர்களான பிரமீளா குருமூர்த்தியும் பார்த்திபராஜாவும் பாடுகையில்  சுருதி வைத்துக்கொள்ளாமல் பாடினார்கள். அது தப்பு என்றார். அப்புறம் சுருதி வைத்துப் பாடுவது பற்றி விளக்கினார். இதற்காக மிக எளிதாக சிலப்பதிகாரம் வரை போய் திரும்பினார்.  மக்களுக்காக, மக்களைப் பாடாத எந்த இசையும் மக்களிடம் போய்ச்சேராது என்றார் முத்தாய்ப்பாய்.

இரண்டாம் நாள் நிகழ்வுக்கு வந்திருந்த பாடகர் ஏவி ரமணன் பல்கலைக் கலைஞராக உற்சாகப் படுத்தினார். உதடுகளைக் குவித்து விசில் அடித்து எந்த பாட்டையும் எந்த ஒலிக்குறிப்பையும் கொண்டு வந்துவிடுகிறார். விங்டம் என்ற பெயரில் பறவைகளின் ஒலிகளை விசில் ஒலியில் கொண்டு ஒரு ஆல்பம் தயாரித்து வெளியிடத் தயார் நிலையில் உள்ளதாம்.

மார்கழி உற்சவத்தில் கானா பாடல்கள் இடம்பெறவேண்டும் என்ற எங்களுடைய கனவை நிறைவேற்றியதற்கு நன்றி என்று அதிரடியாகக் கூறி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முனைவர் வை.ராமகிருஷ்ணன். இது அந்திமழை - பனுவல் இசை விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி. ராமகிருஷ்ணனுடனுடைய உரையுடன் நீலகண்டன் குழுவினரின் கானா பாடல்கள் நிகழ்ச்சியும் இடம்பெற்றது மிகச்சிறப்பானதாக அமைந்தது.

சீறாப்புராணம் பாடுவதில் புகழ்பெற்ற  இசை அருவி சீறா குமரி அபுபக்கர் அடுத்த நாள் நிகழ்ச்சியில் ஒருமணி நேரம் கான மழை பொழிந்தார். எண்பது வயதிலும் அவரது நடுக்கமற்ற குரல் பரவசப்படுத்தியது.

சென்னையின் புகழ்பெற்ற ஓட்டல் அதிபரான ருமைஷ் பைஷி இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இவர் சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவரின் 11-வது தலைமுறையைச் சேர்ந்தவராம்!  நடனக்கலைஞர் சந்திரலேகா பற்றிய ஆவணப்படத் திரையிடல் மறுநாள் நிகழ்ந்தது. கலைவிமர்சகர் சதானந்த மேனன் கலந்துகொண்டு நினைவுகளைப் பகிர்ந்தது சிறப்பாக அமர்ந்தது.

ஜனவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com