சினிமா செய்திகள்

சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்து வைத்த நடிகர் தனுஷ்!

Staff Writer

நடிகர் தனுஷ் இட்லி கடை வெற்றிக்காக கிடா வெட்டி விருந்தளித்துள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான இட்லி கடை அக்.1 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருந்தனர்.

வெளிநாட்டிலிருந்து தன் கிராமத்துக்கு திரும்பும் தனுஷ், தன் தந்தையின் தொழிலான இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தும் கதையில் சில உணர்வுப்பூர்வமான தருணங்கள் இருந்ததால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முக்கியமாக, பலரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், ராயனைத் தொடர்ந்து இயக்குநராக தனுஷ் இப்படத்திலும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவார் என்றே தெரிகிறது. மேலும், இதுவரை இப்படம் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.

இந்த நிலையில், இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய தனுஷ், ஊர்காரர்களுக்கு கிடா வெட்டி விருந்தளித்துள்ளார்.

தன் குடும்பத்தினருடன் நேற்று (அக்.4) தேனி சென்ற தனுஷ், இன்று ஊர்காரர்களுக்கு கறி விருந்தளித்துள்ளார். விருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.