விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் அந்தப் படத்தின் தொகுப்பாளர் பிரிவுக்குதான் பொறுப்பு என்கிறபடி இயக்குநர் அமீர் கருத்து கூறியிருந்தது, திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, படத்தின் எடிட்டர்கள் மீது வலுவான சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.
அதைத் தொடர்ந்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “ திரைப்படம் படச்சுருளிலிருந்து டிஜிட்டலுக்கு மாறியபிறகு, மொத்த சிஸ்டமும் மாறிவிட்டது. முன்னர் ஒரு வெர்சன் தான் இருக்கும். டிஜிட்டல் வந்தபிறகு நூறு பேரிடம் படத்தின் காப்பி இருக்கிறது. தயாரிப்பாளரிடம் இயக்குநரிடம் நாயகனிடம் மிக்சுக்காக அனுப்பும் இடத்தில் என பல தரப்பினரிடமும் இருக்கும். அரசாங்கத்தாலேயே இணையத்திருட்டைத்தடுக்க முடியவில்லை என்கிறபோது, இது எங்களுக்கு பெரிய முன்னெச்சரிக்கை. எப்படி படத்தைப் பாதுகாப்பது என்பது குறித்து தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி முடிவெடுப்போம்.” என்றார் செல்வமணி.
மேலும், “ படத்தைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மட்டும் இருப்பதில்லை. ஆனால் எடிட்டர்களிடம் மட்டும்தான் இருக்கும் என்பதைப் போல இந்தப் படத்தின் பிரதீப்தான் காரணம் என...தகவல்கள் பரவியுள்ளன. திருமணமாகி 6 ஆண்டுகளாகி அவருடைய மனைவி எட்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். பெரிய மன உளைச்சல். தனிப்பட்டு பாதிப்பு. இதில் அமீர் சொன்ன கருத்து வேறுமாதிரியாகக் கருதப்படும் என்பதால், அவர் திரும்பப்பெற வேண்டும்.” என்றும் செல்வமணி கூறினார்.