இளையராஜா 
சினிமா செய்திகள்

ஹார்மோனியத்தை இனி தொடமாட்டேன் என்ற இளையராஜா!

Staff Writer

‘ராஜாதி ராஜா’ படம் வெற்றி பெறவில்லை என்றால் இனி ஹார்மோனியத்தை தொடமாட்டேன், பாடல் பாடமாட்டேன் என்று இளையராஜா சொன்னதாக ரஜினி கூறியுள்ளார்.

சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர் இளையராஜா, இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, தமிழக அரசு சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அமைச்சர்களும், திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ரஜினி, "நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. 70, 80களில் வந்த படங்களில் இருந்து அவரின் மூன்று பாடல்கள் எடுத்து இப்ப போட்டாலும் படம் வெற்றியாகிவிடும். அவரின் பாடலை கூலி திரைப்படத்தில் கூட பயன்படுத்தியுள்ளோம்.  

ராகதேவி இந்த ராகதேவனுக்கு அப்படியே தள்ளிக் கொடுத்திருக்கிறார்.

ஒருமுறை வாங்க ரஜினி உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார். நான் சென்றபோது, 'பாவலர் அண்ணன் இறந்துவிட்டார். கங்கை அமரன் செட்டிலாகி விட்டான். பாஸ்கர் கொஞ்சம் செட்டில் பண்ண வேண்டும். அதற்கு ஒரு படம் செய்ய வேண்டும் என சொன்னார்.

அப்படி செஞ்ச படம் ராஜாதி ராஜா. படப்பிடிப்பில் பாஸ்கர் படத்தைப் பற்றியே பேச மாட்டார் . எனக்கு டென்சனாகி விட்டது. படம் வெற்றிபெறுமா? சரியா வருமா என்று...

அப்பொழுது பஞ்சு அருணாசலம் ஊரில் இல்லை. இளையராஜாவிடம் சென்று ’டென்சனாக இருக்கிறது. படம் எப்படி ஓடும்? எப்படி வரும்னு தெரியல்..’ என்று சொன்னேன். அவர் ’சாமி இந்த படம் பற்றி ஒரு லைன் கூட எனக்கு தெரியாது.. இந்த படம் சில்வர் ஜூப்ளி போகவில்லை என்றால் இனிமேல் ஹார்மோனியம் பெட்டியை தொட மாட்டேன்.. பாட மாட்டேன்’ என சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர் சொல்வதை செய்வாரே என்று பார்த்தேன்.

நான் சொல்லவில்லை சாமி... மூகாம்பிகா சொல்கிறாள்.. அதனால் நான் சொல்கிறேன் என அவர் சொன்னார். இப்படி சொல்லிவிட்டாரே... இந்த படம் ஓடாவிட்டால் பணத்தைக் கொடுத்தாவது படத்தை சில்வர் ஜூப்ளி ஓட்டிவிட வேண்டும் என மைண்ட் செட் ஆகி இருந்தேன். ஆனால் படம் சில்வர் ஜூப்ளியாக ஓடியது.

என்ன ஒரு நம்பிக்கை. எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கு.. ஆனால் இந்த மாதிரி நம்பிக்கையா.. முழுமையான சரண்டர்.. அவர் சொன்னால் பலிக்கும்.

இளையராஜாவை மாமனிதராகப் பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகளில் அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். முதன்முதலில் 74இல் ஜி.கே. வெங்கடேஷின் உதவியாளராக இருந்தபோது சின்ன பையனாக இருந்தார். ’புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் பார்த்தபோது ஓர் இளைஞராக.. கிளீன் சேவ் செய்தவராக அவரைப் பார்த்தேன். பேன்ட் சர்ட் ஜிப்பாவுடன் இருந்த அவர், திடீரென ஒருநாள் மொட்டை அடித்து கழுத்தில் உத்திராட்ச கொட்டையுடன் பொட்டு வைத்து இருந்தார். அவரை பார்த்த உடன், ’என்ன சாமி இது’ என்று கேட்டபோது, ’இதுதான் சாமி ஒரிஜினல்’ என்றார். அப்போது முதல், அவரை ’சாமி’ என்றுதான் கூப்பிட்டு வருகிறேன்.

யாராக இருந்தாலும் இசையை அள்ளிக்கொடுப்பவர் இளையராஜா. ஆனால், கமலுக்கு மட்டும் சற்றுக் கூடுதலாக அள்ளிக் கொடுப்பார். இதை முன்பே சொல்லி இருக்கேன். தென்பாண்டிச்சீமையிலே தேரோடும் வீதியிலே என்ற பாட்டை பாடினால் இங்கு இருக்கும் 1000 பேரும் அழுதுடுவீங்க..

அவர் பார்க்காத வெற்றிகள் இல்லை. ஆனால், ஒருவருக்குத் தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே கிடைக்கக் கூடாது. அவ்வபோது, தோல்விகளையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியின் அருமை தெரியும். அவர் கொடிகட்டி பறந்தபோது, இன்னொரு இசையமைப்பாளர் வந்தார்.

அவர் வந்தபின் நான் உட்பட பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரிடம் சென்றோம். யார் எங்கு சென்றாலும், என்ன நடந்தாலும் தி. நகரிலிருந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு காலை 6 மணிக்கு இளையராஜாவின் கார் வழக்கம் போல் சென்றுகொண்டிருந்தது.

பாஸ்கர் மறைந்தார். ராஜாவின் மனைவி ஜீவா மறைந்தார்; உயிராக நினைத்த மகள் பவதாரணி மறைந்தார். ஒரே மகள் என்றால் அவ்வளவு அன்பு.. பிரியம்.. சும்மா உட்காந்திருப்பார். மகள் வந்தால் போன கரண்ட் வந்த மாதிரி. ஆனால் எந்தச் சலனமும் இல்லாமல் அவர் ஆர்மோனியம் வாசிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.

நமது உலகத்தில் அவர் இல்லை. இசை உலகத்தில் அவர் இருக்கிறார். பிரசாத் ஸ்டூடியோவில் அவருக்கு இடமில்லை என்ன சொன்னபோது, அதே ரோட்டில் ஒரு தியேட்டரை வாங்கி தனியாக ஒரு ஸ்டுடியோவை கட்டினார்.

திரையுலகில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், விவேக் ஆகிய இரண்டு பேரின் இடங்களை யாராலும் நிரப்ப முடியாது. கோவிட் காலத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்தபோது யாருக்கும் சிந்தாத அவரது கண்ணீர், நண்பன் எஸ்.பி.பிக்காகச் சிந்தியது. அதையடுத்து, ’மெட்டா... வரிகளா’ என்று வாக்குவாதம் வந்தது. அப்போது இளையராஜா, ’அது எல்லாம் எனக்கு தெரியாது. நான் சிம்பொனி எழுதி இருக்கிறேன். இந்த மாதிரி சிம்பொனி யாரும் இதுவரை எழுதியதில்லை’ என்றார்.

ஸ்கிரீன் ப்ளே எழுதிக் கொடுக்கிறேன்!

ரஜினி

இந்த இளையராஜாவை எந்த அளவுகோலும் வைத்து அளக்க முடியாது. அதை மீறி நின்றவன் நான் என்று நின்றவர் இளையராஜா. அவரை, இன்கிரிடேபிள் இளையராஜா (incredible ilaiyaraaja) என்கிறோம். இளையராஜாவுக்கு இருக்கும் திமிரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதற்கு மிகவும் தகுதியான ஆள் அவர்தான். நீதி, நியாயம், உண்மையுடன் கடினமாக உழைத்தால் எல்லாமே உன் பின்னால் வரும். அந்த இசைக்கு இருக்கும் பவரை நீங்கள் பார்த்தீர்கள். கமல்ஹாசன் நான்கு வரியில் பாடல் பாடினார். அந்தப் பாடலும் நான் இவ்வளவு நேரம் பேசியதும் ஒன்றுதான். அதுதான் அந்த இசையின் பவர். அதற்கு அரசன் இளையராஜாதான். அவர் என்றும் என்றும் நன்றாக இருக்க வேண்டும். இளையராஜா உங்களுடைய சுயசரிதை படத்தை சீக்கிரம் வெளியிடுங்கள். என்னைவிட்டால் நானே ஸ்கிரீன் ப்ளே எழுதிக் கொடுக்கிறேன்” என்றார்.