தனது தந்தை விஜய்யின் ரசிகர் ஒருவர் தன்னை சிறுவயதில் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்ற வேடிக்கையான சம்பவம் ஒன்றை ஒரு சிறுவனிடம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கூறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அப்போது தன்னைக் கடத்திச் செல்வதாக அவர் நினைத்தாராம்.
'சிக்மா' திரைப்படத்தின் படபிடிப்புத் தளத்தில் நடிகர் ஜெமினி மணியின் மகனிடம் தனது பள்ளிப் பருவத்தில் நடந்த இந்த வேடிக்கையான கடத்தல் பற்றி ஜேசன் சஞ்சய் குறிப்பிடுகிறார். அப்படித் தூக்கிச் சென்ற அந்த ரசிகர் ஜெமினி மணிதானாம்.
வழக்கமாக பள்ளியிலிருந்து விஜய்யின் கார்வரை அழைத்துச் செல்லும் காவலரை முந்திக்கொண்டு, தன்னை ஒருவர் தூக்கிக்கொண்டு சென்றதால் தான் கடத்தப்பட்டு விட்டதாக எண்ணி தப்பிக்க முயற்சித்ததாக ஜேசன் சஞ்சய் கூறினார்.
பின்னர் விஜய்யின் காருக்கு அருகில் சென்றபோதுதான், தந்தையின் ரசிகர் அவர் என்று புரிந்துகொண்டதாக அவர் விவரித்தார்.
இந்த வேடிக்கையான சம்பவம் குறித்து ஜெமினி மணி, அதன் பின்னணியை பகிர்ந்தார். தான் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும், அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதற்காக சஞ்சயை தூக்கிக் கொண்டுபோய் காரில் அமரச் செய்ததாக கூறினார். அப்போது காரில் அமர்ந்திருக்கும் விஜயைப் பார்க்கமுடியும். சஞ்சய் ஆறாவது படிக்கையில் இது நடந்திருக்கிறது!
ஜேசன் சஞ்சய்யின் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரல் வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.