நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கெனவே திருமணம் ஆனவர். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை கோயிலில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை. இந்நிலையில் ஜாய் கிரிசில்டா கருவுற்ற நிலையில், அவரிடம் இருந்து ரங்கராஜ் விலகியுள்ளார்.
ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தார். மேலும் ரங்கராஜ் பல முறை கருவுற்று அவரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்திருப்பதாக தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தான் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தனக்கும் தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஒவ்வொரு மாதத்திற்குமான பாரமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ், தனக்கு மாதம் மாதம் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.