ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருந்த 'தலைவர் 173' படத்தில் இருந்து எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார்.
கமல் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்வு வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், “கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், ரஜினிகாந்தின் “தலைவர்173” படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். நீண்ட காலம் கழித்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் எனக்கு வழங்கியதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன். அதேநேரம், நான் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்குகிறேன் என செய்தி வெளியானபோது உற்சாகமான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு்க்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் அறிக்கை ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, சுந்தர். சி முக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.