நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜனை வைத்து இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ஒரு படத்தை இயக்க முடிவெடுத்ததும் அதற்கு ஒரு பெயரையும் அவர் தயாராக வைத்திருந்ததும் இப்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :
” ஞானபீட விருதினை
வாழ்த்த வந்திருந்தார்
நடிகர் பாண்டியராஜன்
அவர் நடிப்பும் துடிப்பும்
பிடிக்கும் எனக்கு
ஒரு தேநீர் அருந்தும் நேரம்
உரையாடலுக்கு ஒதுக்கினோம்
இதுவரை அவருக்குச் சொல்லாத
ஒரு கதை சொன்னேன்
"ஆண்பாவம் வெளிவந்து
உங்கள் புகழ்பரவத்
தொடங்கியிருந்த நேரம்
பாலசந்தருக்குப் பாட்டெழுதக்
கவிதாலயா சென்றிருந்தேன்
‘உங்களுக்குப் பாண்டியராஜனைத்
தெரியுமா’ என்றார் பாலசந்தர்
‘தெரியும்; நல்ல பையன்’ என்றேன்
‘அவருக்கு ஒரு கதை வைத்திருக்கிறேன்;
அவர்தான் பொருத்தமானவர்;
அழைத்துவர முடியுமா’ என்றார்
‘உறுதியாக’ என்றேன்
அதன்பிறகு என்ன காரணமோ
அது நின்றுபோனது" என்று சொல்லிமுடித்தேன்
"படமே எடுக்கவேணாம் கவிஞரே
பாலசந்தர் என்னை
நெனச்சதே போதும்"என்றவர்
கண்களில் நீர்க்குடம் நிறைந்தது
அந்தக் கதைக்கு அவர் வைத்த
தலைப்பை மட்டும் என்னால்
மறக்கமுடியவில்லை பாண்டியராஜன்!
கூடாரமடித்து நெஞ்சில் குடியிருக்கிறது
’அவனுக்காக மழை பெய்கிறது’. “