விமர்சனம்

ஜி.டி.நாயுடு - விமர்சனம் பைத்தியம் பிடிக்க வைக்கும் மேதையின் கதை !

மிஸ்டர் முள்

வைரமுத்துவும், ரஜினியும் ‘எட்டு எட்டா மனுஷன் வாழ்வைப் பிரிச்சுக்கோ’ என்கிறபோது இன்னொருத்தர் மனித வாழ்வு மூன்றே பிரிவுகளால் இருக்கவேண்டும் என்கிறார்.

முதல் 25 ஆண்டுகள் அனைத்தையும் பிரித்து மேய்ந்து கற்றுக்கொள்வது… அடுத்த 25 ஆண்டுகள் வளமாக சம்பாதிப்பது… மூன்றாவது 25 ஆண்டுகள் தான் அதுவரை கற்றதையும் பெற்றதையும் சக மனிதர்களுக்கு வழங்குவது…

சொன்னவர் சாட்சாத் ஜி.டி. நாயுடுவேதான்.

அவரது பயோபிக் அவர் மறைந்து ஐம்பது ஆண்டுகள் தாண்டியிருக்கும் நிலையில் திரைப்படமாகியிருக்கிறது. 1893ல் பிறந்து 1974ல் காலமானவர் ஜி.டி. நாயுடு.

கதை, படிப்பு பிடிக்காமல் அவர் மூன்றாவது வகுப்பில் டிராப் அவுட் ஆவதில் தொடங்கி, அவரது 80 வது வயது இறுதிக்காலம் வரை பயணிக்கிறது. 100க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரின் முக்கியமான சம்பவங்கள் பல கவனத்துடன் ஆவனப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பிரிடிஷ்காரர் ஒருவரிடம் ஒரு பஸ்சை கடனாகப் பெற்று அதை 300க்கும் மேற்பட்ட பஸ்களாக மாற்றிய அவரது மேஜிக், கையில் என்ன பொருள் கிடைத்தாலும் அதைப் பிரித்து மேயும் ஆர்வம் என்று அவரது மேதமை பல காட்சிகளை த்ரில் ஆக்குகிறது. குறிப்பாக ஜெர்மன் சென்று ஹிட்லரை ஜிடி நாயுடு சந்திக்கு காட்சியெல்லாம் வேற லெவல்.

தன்னைவிட சின்னப்பெண் ஒருவரை அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு சொல்லப்படும் அல்பக் காரணம் போன்ற சுய தம்பட்டக் காட்சிகளும் கொஞ்சம் இருக்கின்றன என்றாலும் ஜி.டி. நாயுடு பற்றி அறியாதவர்களுக்கு இப்படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரேதான்.

ஜிடி நாயுடுவாக மாதவன் தொடங்கி பிரியா மணி, துஷாரா விஜயன், சத்யராஜ், ஜெயராம், கருணாகரன், தம்பி ராமையா, என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

வயதான இறுதிக்கால கெட் அப் தவிர்த்து இளமைக்காலங்களில் ஜிடி நாயுடுவை விட மாதவன் தான் தெரிகிறார். பிரியாமணிக்கு துஷாராவுக்கும் மிகக் குறைவான காட்சிகளே என்பதால் அவர்கள் நடிப்பு குறித்து சொல்ல ஒன்றுமில்லை. கோவை பாஷயை அழுத்திப்பேசுகிறேன் என்கிற பெயரில், சத்யராஜ் தனது ஓவர் ஆக்டிங்கால் ரொம்பவும் சோதிக்கிறார். போதும் சாமி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.

படத்தின் அடுத்த மிகப்பெரிய துயரம் பெரியாராக விஜய் ஜேசுதாஸை நடிக்கவைத்து அவரை ஜூனியர் ஆர்டிஸ்ட் போல காட்டியிருப்பது.

ஒளிப்பதிவு அரவிந்த கமலநாதன். என்னமோ போடா மாதவா ரகம்.

இசை கோவிந்த வசந்தா. பொதுவாக நல்ல இசையமைப்பாளர். ஆனால் இந்தப் படத்திற்கு அம்மஞ்சல்லிக்கு பிரயோசனமில்லை.

‘பைவ் ஸ்டார் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். பைத்தியக்காரர், துரோகி என்று பிரிடிஷ் காரர்களாலும் சில நம்மூர்காரர்களாலுமே முத்திரை குத்தப்பட்ட ஒரு அபூர்வ மனிதரின் எவ்வளவு உணர்வுபூர்வமாக சித்திரித்திருக்க முடியும் ?

ஆனால் இவரது பரிதாபமான இயக்கத்தால் நாயுடு நீ தியேட்டரை விட்டுப் போயிடு என்கிற பரிதாப நிலையில் தான் இருக்கிறது படம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram