இயக்குநர் ஷியாம் பெனகல் 
சினிமா

தேசிய விருது பெற்ற இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்!

Staff Writer

தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஷியாம் பெனகல் (வயது 90) உடல் நலக்குறைவால் நேற்று மும்பையில் காலமானார்.

தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் கதையாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்தவர். 1970களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தார். தன் வாழ்நாளில் 18 தேசிய விருதுகளை வென்றவர்.

இவரது படங்கள் அனைத்தும், வாழ்வின் எதார்த்ததை பிரதிபலிப்பை. அங்கூர், நிஷாந்த், மந்தன் ஆகிய மூன்று திரைப்படங்களும் நிலப்பிரபுத்துவத்தின் ஒடுக்குமுறையை பேசியது. பூமிகா, மண்டி போன்ற திரைப்படங்கள் சமூகத்தின் மிக மோசமான பழக்க வழக்கங்களைப் பேசியது.

இந்திய திரைப்படத்துறையை உலக அளவில் கொண்டு சென்ற மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷியாம் பெனகல். அவரது முதல் படமான அங்கூர் (1974) முதல் ஜுபைதா (2001) வரை, அவரது படங்களில் நாயகிகளுக்கு தனி முக்கியத்துவம் இருக்கும்.

திரைப்படத்துறையில் இவரது சேவையை பாராட்டி, இந்திய அரசு, 1976இல் பத்மஸ்ரீ விருதும் 1991இல் பத்மபூசன் விருதும் 2005இல் தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கி மரியாதை செய்தது. 2013இல் இவருக்கு ஏ.என்.ஆர் தேசிய விருது வழங்கப்பட்டது.

இவர், 2006-பிப்ரவரி முதல் 2012-பிப்ரவரி 15 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

விவசாயிகள், தலித்துகள், பெண்கள், பாலியல் தொழிலாளர்களைக் கதை மாந்தர்களாக கொண்ட திரைப்படங்களை இயக்கிய ஷியாம் பெனகல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.