சமீபத்திய பேட்டி ஒன்றில் சவார்க்கர் பற்றிப் பேசி இருந்தார் சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்காரா. வரலாறு படித்துள்ளதாக தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் சுதா அந்த பேட்டியில், ‘என்னுடைய டீச்சர் சொன்னாங்க. சாவர்க்கர் ஒரு பெரிய தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். திருமணத்துக்குப் பின் தன் மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அந்த பெண்ணிற்கு வீட்டில் இருப்பதற்குத் தான் விருப்பம். ஏனென்றால் அந்த காலத்தில் பெண்கள் படிக்கமாட்டார்கள். பின்பு அவங்க படிக்க போகும் போது, அந்த தெருவில் உள்ளவர்கள் அவர்களை அசிங்கப்படுத்தினர். அவர் அழுது கொண்டு, பள்ளிக்குப் போகமாட்டேன் என சொல்வார்கள். அப்போது சாவர்க்கர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு படிக்க வைக்கச் சென்றார். இது சரியா தப்பா? அங்கிருந்து என்னுடைய கேள்விகள் எழுந்தது,’ என்று சொல்லி இருந்தார்.
இந்த பேட்டி சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவருக்கு எதிராக பலரும் கருத்து வெளியிட்டனர். ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் பூலேவின் வரலாற்றைத்தான் சாவர்க்கரின் வரலாறு என சுதா கொங்கரா மாற்றிப் பேசியதாக விமர்சித்தனர்.
இதைத் தொடர்ந்து, “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்’ என எக்ஸ் தளத்தில் கூறி உள்ளார்.