50 வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவுக்கு சிறிதும் இல்லை என்கிற விளக்கத்துடன் இளையராஜாவிடம் கருப்பு படக்குழு மன்னிப்பு கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
தொடர் ,தோல்விகளால் துவண்டு போயிருந்த நடிகர் சூர்யாவுக்கு சுமார் ஆறுதல் வெற்றியாய் அமைந்திருக்கும் படம் கருப்பு. சனி, ஞாயிறுகளின் வசூல் திங்கள், செவ்வாய்களில் பாதியாய்க் குறைந்திருக்கும் நிலையில் இப்படம் அசலுக்கு ஆபத்தில்லை என்கிற நிலையில்தான் வசூல் செய்து வருகிறது.
நீதித்துறை குறைபாடுகளைப் பேச வந்த இப்படத்தில் திடீர் திடீர் பக்திப்பரவசக் காட்சிகள் படத்தின் வீர்யத்தைக் குறைத்தன. அவை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருந்த ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடலைப் பயன்படுத்திவிட்டு போகிற போக்கில் இளையராஜாவை குரூர வன்மத்தோடு கிண்டலடித்தது அவரது ரசிகர்களைக் கொதிப்படைய வைத்தது. அதுகுறித்து பதிவிட்ட பலரும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் சாதியைக் குறிப்பிட்டு ’ இன்னும் உனக்குள்ள இருக்க சாதி வன்மம் போகலை பாத்தியா?’ என்றும் கடுமையாக சாடியிருந்தனர். இது படம் குறித்த நெகடிவ் விமர்சனமாக மாறியது. பட வெற்றியின்போக்கும் மாறத்தொடங்கியது.
இந்நிலையில் தங்கள் செயலில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்கிற சப்பைக்கட்டோடு படக்குழு ராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் வெளியிட்டுள்ளது.
இக்கடிதத்திற்கு எதிர்வினையாற்றிவரும் ராஜா ரசிகர்கள், நிறுவனத்துக்கும் முன்பு முதலில் மன்னிப்பு கேட்கவேண்டியவர் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. மட்டுமன்றி அக்காட்சியை படத்திலிருந்து உடனே நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.