நடிகர் விஜய்
நடிகர் விஜய் 
சினிமா

உதயநிதி, கமல், விஜய்… அடுத்து யார்?

Staff Writer

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடப் பணிகளுக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

“தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்த பணி முழுமைபெற ரூ.40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர்.

இதில், சில வாரங்களுக்கு முன்னர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, மூத்த நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை கடந்த 9ஆம் தேதி வழங்கினார். இப்போது, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.