சினிமா

நடிகர் சங்கக் கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்ட வேண்டும்! – சசிகுமார்

Staff Writer

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கு விஜயகாந்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்புக்கு நேரில் வர முடியாத பல்வேறு திரை பிரபலங்கள், விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் விஜயகாந்த் குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலியும் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார், “நடிகர் சங்க‌க் கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமை கேப்டன் விஜயகாந்த். அவரின் பெயரை புதிய நடிகர்சங்கக் கட்டடத்துக்குச் சூட்ட வேண்டும்.” என்றார்.