Image by wirestock on Freepik
Image by wirestock on Freepik
நல்வாழ்வு

அம்மாகிட்டகூட சம்பளத்தை சொல்லக்கூடாது; ஓர் இளைஞரின் பகீர் அனுபவம்!

மு.வி.நந்தினி

ஆண்களிடம் சம்பளத்தை கேட்கக்கூடாது என்பது பழைய மொழி இல்லை; இப்போதும் பொருந்தும் மொழி என்பதை கௌதம் ஆர்யா என்ற இளைஞரின் அனுபவம் சொல்கிறது. அண்மையில் இந்த இளைஞர் சமூக ஊடகமான ரெட்டிட் தளத்தில் எழுதிய பதிவு ஒன்று செய்தியாகியிருக்கிறது. அதாவது தனது தாயிடம் தன்னுடைய உண்மையான சம்பளத்தை சொன்னதால் என்ன நடந்தது என்பதை இந்த இளைஞர் எழுதியிருந்தார்.

அந்தப் பதிவு இதுதான்!

“என் பணத்தை செலவழிக்க என் அம்மா அனுமதிக்கவில்லை, அதனால் என் உண்மையான வருமானத்தை அவரிடம் சொன்னேன். இப்போது அம்மாவுடைய உறவினர்கள் அனைவரும் எனக்கு போன் செய்து பணம் கேட்கிறார்கள்...

ஹாய் மக்களே,

ஒரு நள்ளிரவில், என் உறவினரிடமிருந்து (அம்மாவின் பக்கத்திலிருந்து என் சித்தி மகன்) எனக்கு அழைப்பு வந்தது, அவர் ஏதோ கடுமையான நிதி பிரச்சினையில் சிக்கியதால் 1 லட்சம் ரூபாய் கேட்டார்.

அவர் ஏற்கனவே எனக்கு 50,000 ரூபாய் வாங்கியதைத் திருப்பித் தரவில்லை. மறுபுறம், என் மாமாவும் எனக்கு கடன்பட்டிருக்கிறார், ஆனால் திரும்பக் கொடுப்பதைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, அவர் அதிகமாகக் கேட்பதைப் பற்றி பேசுகிறார்.

இதெல்லாம் தொடங்கியது, நான் வீட்டு அலுவலகமாக மாற்றிய அறைகளில் ஒன்றில் கூடுதல் ஏசியை நிறுவ விரும்பியபோது...

என் அம்மாவின் வாதம் என்னவென்றால், எங்களிடம் ஏற்கனவே மூன்று அறைகளில் 3 ஏசிகள் உள்ளன, கோடையில் நான் ஒரு அறைக்கு மாறலாம். ஆனால் நான் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் அலட்சியமாக இருப்பது பற்றி அம்மா கடிந்துகொண்டார். அது கடுமையான வாக்குவாதமாக மாறியபோது, நான் அவரிடம் எனது உண்மையான வருமானத்தை சொன்னேன், இது நான் முன்பு அவரிடம் சொன்னதை விட அதிகம். கேட்டதும் அம்மா அமைதியாகிவிட்டார், நான் என் வீட்டு அலுவலகத்திற்கு புதிய ஏசி வாங்கினேன்.

அப்போதிருந்து, என் அம்மா அடிக்கடி ஷாப்பிங் செய்கிறார் (அவர் சிக்கனமாக வாழ்ந்திருந்தால் இப்போது எனக்கு மகிழ்ச்சிதான்) ஆனால் அம்மா, இப்போது என் வருமானத்தைப் பற்றி அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடையே பரப்பி வருகிறார். ஒருவேளை அது அம்மாவுக்கு பெருமை சேர்க்கலாம். ஆனால், இது எனக்கு கூடுதல் அழுத்தத்தை அளித்து வருகிறது, இப்போது எனது உறவினர்கள் தினமும் பணம் கேட்டு நச்சரிக்கிறார்கள்.

பயணங்களைப் பற்றி இன்ஸ்டாகிராமில் இடுகையிடுவதை நான் நிறுத்த வேண்டியிருந்தது, ஏனென்றால் இப்போது நான் அதை அதிகமாகக் காட்டினால், அது உறவினர்களிடமிருந்து கோரிக்கைகளை அதிகரிக்கும் என்று நான் பயப்படுகிறேன்.

நான் இப்போது என் செல்வத்தை அனுபவிக்க தயங்குகிறேன், ஆனால் என்னைச் சுற்றியுள்ள அனைத்து பண தேவைகளைம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் நான் மிகவும் விரக்தியடைந்தேன்.” என நீண்ட பதிவில் எழுதியுள்ளார்.

இதற்கு பலரும் பலவிதமான ஆலோசனைகளை அவருக்கு வழங்கி வருகின்றனர்.

“ஒன்று காசு கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது திரும்பக் கிடைக்காது என்ற நம்பிக்கையுடன் பணம் கொடுக்க வேண்டும்” என்று அந்த இளைஞரின் பதிவிற்கு ஒருவர் பதிலளித்துள்ளார்.

"உங்கள் உண்மையான சம்பளம் என்ன என்பதை உங்கள் உறவினர்களிடம் ஒருபோதும் சொல்லாதீர்கள்" என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

“தேவையில்லாமல் பணத்தை வீணாக்காதீர்கள். யாராவது கடன் கேட்டால், பணம் கையில் இல்லை, என்று சொல்ல வேண்டும்” என்பது மற்றொருவர் கருத்து.

“சம்பளம் அதிகம் என்றும், இன்னும் கொஞ்சம் கடனை அடைக்க வேண்டும் என்றும் பொய் சொல்ல வேண்டும். அவர்கள் முன்பு கடன் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கேட்கலாம்” என்று மற்றொருவர் அறிவுறுத்தியுள்ளார்.

“குறைவா சம்பளம் வாங்கினாலும் கஷ்டம், அதிகமா சம்பளம் வாங்கினாலும் கஷ்டம்.. இதென்ன பெரிய ரோதனையா போச்சு...” என பலரும் புலம்பியும் வருகின்றனர். சரி... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உண்மையான சம்பளத்தை வெளியில் சொல்லலாமா? கூடாதா?