இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் படைப்பான குட்டி இளவரசனைத் தந்த எழுத்தாளர் செந்த் - எக்சுபெரியின் மனைவி கோன்சுலோ. இவரது தன் வரலாற்று நூலை குட்டி இளவரசி- ஒரு மலரின் நினைவுகள் என்ற பெயரில் பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஜெயராஜ் தானியேல். கணவனை இழந்த துக்கத்தில் இருக்கிறார் கோன்சுலோ. அச்சமயம் விமானியான செந்த் எக்சுபெரியைச் சந்திக்கிறார். உடனே நண்பர்களுடன் அவரை விடாப்பிடியாக அழைத்துக்கொண்டு விமானத்தில் பறக்கிறார் எக்சுபெரி. தன் அருகில் அமர வைத்துக்கொண்டு முத்தம் தருமாறு கேட்கிறார். கணவனை இழந்த துக்கத்தில் இருப்பவளிடம் முதல் சந்திப்பிலேயே முத்தம் தருமாறு கேட்கிறீர்களே என உரையாடல் போகிறது. ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் விரிகின்றன காட்சிகள். பின்னர் அவர் எக்சுபெரியைத் திருமணம் செய்துகொள்கிறார். மிகச்சிறப்பானதொரு காதல், மணநினைவுகள், பிரிவுகள் குறித்த உரையாடல்களாக இந்த நூல் அமைந்திருக்கிறது. நமக்கு முற்றிலும் புதிய ஐரோப்பிய லத்தீன் அமெரிக்க கலாச்சார பின்னணில் அமைந்த நினைவுக்குறிப்புகள். ஆனால் எங்கும் காதலுக்கு ஒரே மொழிதானே? மொழிபெயர்ப்பும் சிக்கல் இல்லாமல் அமைந்திருப்பது நன்று.
குட்டி இளவரசி, ஒரு மலரின் நினைவுகள், கோன்சுலோ து செந்த் எக்சுபெரி, தமிழில் ஜெயராஜ் தானியேல், வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், பேச:7550098666
விலை ரூ.499