வைரமுத்து, வண்ணநிலவன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் 
இலக்கியம்

வைரமுத்துவுக்கு ஞானபீடம்: கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர்கள்!

தா.பிரகாஷ்

இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதை எழுத்தாளர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தமிழின் முன்னணி படைப்பாளிகளான வண்ணநிலவன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் ஆகியோர் வைரமுத்து குறித்து எழுதியிருக்கும் சமூக ஊடகப்பதிவுகள் பேசுபொருளாகியுள்ளன.

வண்ணநிலவன்

வண்ணநிலவன்

வைரமுத்து ஞானபீட விருதை சிபாரிசுகளைப் பிடித்துதான் வாங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாகித்ய அகாடமி விருது வாங்குவதற்காக, விருது வழங்கும் குழுவில் நான் இருக்கிறேன் என்ற தவறான தகவலில் என்னைப் பார்க்க, ஏராளமான பழங்களுடன், காவ்யா சண்முகசுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தார்.

நான் குழுவில் இல்லை என்றதும் பழத்தட்டைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார். அந்த ஆண்டு விருதுக் குழுவில் வல்லிக்கண்ணன்தான் இருந்தார். வண்ணநிலவனை வல்லிக்கண்ணன் என்று நினைத்துக் கொண்டு பழத்தட்டுடன் என்னைப் பார்க்க வந்தவரதான் இந்த வைரமுத்து.

சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா

ஸூகராணாம் ஸூகர ஏவ அதிபதி

மேற்கண்ட சம்ஸ்கிருதப் பழமொழியின் பொருள், பன்றிகளுக்குப் பன்றியே அதிபதி.

அகிலனுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட போது சுந்தர ராமசாமி அகிலனின் எழுத்தை மலக்கிடங்கு என்று வர்ணித்தார்.

பிறகு ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் கிடைத்தது. ஜெயகாந்தன் இலக்கியத்திலும் இல்லை, வணிக எழுத்திலும் இல்லை. ரெண்டுங்கெட்டான். நா. பார்த்தசாரதி மாதிரி. அகிலனை விடக் கொஞ்சம் தேவலாம்.

இப்போது வைரமுத்து. மேற்கண்ட வரிசையில் இது சரியான தேர்வுதான். இந்தத் தேர்வுகள் தமிழ் புத்திஜீவிகளின் பரிந்துரையின் பேரில்தான் வழங்கப்படுகின்றன. தமிழில் புத்திஜீவிகள் யார்? கமல்ஹாசன், மணி ரத்னம், ஷிவ் நாடார், திண்டுக்கல் லியோனி, நடிகர் விஜய், த்ரிஷா, சாலமன் பாப்பையா, பாஜக அண்ணாமலை, நீயா நானா கோபிநாத், ரெடின் கிங்ஸ்லி, ரஜினி காந்த், வண்ணி ராணி சீரியல் புகழ் ஆல்யா மானஸா, சிவ கார்த்திகேயன், மாபாகா, ப்ரியங்கா, ரோபோ ஷங்கர், கோபி – சுதாகர் (பரிதாபங்கள்) போன்றவர்கள்தானே? இவர்களிடம் பரிந்துரை கேட்டுத்தான் ஞானபீட விருது வழங்கப்படுகிறது. அதாவது, தமிழ்நாடு என்றால் இவர்களைத்தான் கேட்பார்கள். ஏனென்று சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக பிரபலமான புத்திஜீவிகளைத்தான் இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யச் சொல்லி அழைப்பார்கள். மேற்கண்ட தமிழ்நாட்டு புத்திஜீவிகள் யாரைத் தேர்ந்தெடுப்பார்கள்?

சுந்தர ராமசாமி இன்று உயிரோடு இருந்திருந்தால் திரும்பவும் முன்பு சொன்னதையே சொல்ல வைத்து சோர்வூட்டியதற்காக நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்.

ஜெயமோகன்

ஜெயமோகன்

சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர். வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது. பிறகு அவர்மேல் வந்த பாலியல்குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு. ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள் (பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.

இந்திய துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது.

இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன். தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே. வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.

இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும். நாம் மனம்தளராமலிருக்கவேண்டிய சூழல் இது. வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்பவிருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும்.

தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன். அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்.