(வலமிருந்து) தெ. ஞானசுந்தரம், கு. வெ. பாலசுப்பிரமணியன்)
(வலமிருந்து) தெ. ஞானசுந்தரம், கு. வெ. பாலசுப்பிரமணியன்) 
இலக்கியம்

மா. அரங்கநாதன் இலக்கிய விருது அறிவிப்பு… விருது பெறும் தமிழ் அறிஞர்கள் யார்?

Staff Writer

நடப்பு ஆண்டுக்கான மா. அரங்கநாதன் விருது முனைவர் தெ.ஞானசுந்தரம், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தனித்துவம் மிக்க படைப்பாளியான மா.அரங்கநாதன் பெயரிலான விருதுகளை ஆண்டுதோறும் முன்றில் இலக்கிய அமைப்பு வழங்கி வருகிறது. ஆண்டுக்கு இரு இலக்கிய ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களது பணிகளைச் சீர்தூக்கிப் பார்த்து, கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் மற்றும் எழுத்தாளர் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுபெரும் தமிழறிஞரும், மு.வரதராசனாரின் மாணவருமான தெ.ஞானசுந்தரம், வைணவ உரை வளம் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித்துறையிலும் பணியாற்றியவர்.

அதேபோல், கு.வெ.பாலசுப்பிரமணியன் என்று அழைக்கப்படும் கும்பகோணம் வெங்கடாசலம் பாலசுப்பிரமணியன், கவிதை, கதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, கற்பித்தல் எனப் பலதுறைகளில் சிறந்த பணிகளைச் செய்தவர். இவர்கள் இருவருக்கும் மா.அரங்கநாதன் விருது வழங்கப்படவுள்ளது.

சென்னையில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி ராணி சீதை அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், மா.அரங்கநாதனின் மகன் நீதியரசர் ஆர். மகாதேவன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மா.அரங்கநாதன் படைப்புகள் மற்றும் பொருளின் பொருள் கவிதை ஆகிய நூல்களும் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.