1. சிலைகளின் நிரந்தரப் போர்
முதல் சிலை உடையும் பேரொலி
உன் செவிகளை எட்டுவதில்லை
வேடிக்கை பார்க்கும் உன் மௌனமும்
என்றோ கல்லாய்ச் சமைந்திருந்தது.
உன் மௌனத்தின் மீது வந்து சரிகிறது
உடைந்து விழும் காலத்தின் புழுதி.
அவர்கள் எதையும் மிச்சம் வைக்கப் போவதில்லை,
ஒவ்வொன்றாகச்
சரிந்துகொண்டிருக்கின்றன
காலத்தின் சாட்சியங்கள்.
உடைப்பவர்களின் கரங்களில் இருப்பது
வரலாற்றை அழிக்கும் சம்மட்டி
அது, அவர்கள் மூளைக்குள்
கெட்டிதட்டிப்போன இன்னொரு கற்பாறை.
ஆனாலும் விந்தை பார்
அவர்களே சிலைகளை ஆழமாக நம்புகிறவர்கள்,
சிலைகளின் நிழலில் தஞ்சம் புகுந்தவர்கள்.
பூஜை அறையிலிருந்து
வீதிக்கு வந்திருக்கிறது அவர்களின் மூர்க்கமான பக்தி.
ஒரு கணம் உற்றுப்பார்
அவர்கள் சிலைகளைத்தான் உடைக்கிறார்கள்
ஏனெனில்,
எப்படியாவது தாமும் ஒருநாள்
சிலையாகிவிடத் துடிப்பவர்கள் அவர்கள்.
இங்கு மாமிசமும் ரத்தமும்
எப்பொழுதோ பாறையாக உறைந்துவிட்டன.
மனிதர்கள் யாருமற்ற வீதியில்
நடமாடும் சிலைகள்,
நிற்கும் சிலைகளின் மீது
தொடர்ச்சியாகப் போர் தொடுக்கின்றன.
அது,
சிலைகளை உடைக்கும் சிலைகளின் நிரந்தரப் போர்.
ரத்தத்திற்குப் பதிலாகத் தெருவெங்கும் சிதறிக் கிடக்கின்றன
வரலாற்றின் துகள்களும்
சிலைகளைத் தின்ற சிலைகளின் எச்சங்களும்.
2. அலைகடல்
மிதக்கின்ற கப்பல்கள்
அவற்றின் கட்டுப்பாடு
ஆழத்தின் மௌனம்
பாதி பேசாத சொற்கள்.
திரும்பி வந்து சேராமல் போகலாம்,
உள்ளிருக்கும் காயங்கள்
கண்ணீர்த் துளிகளைத் தாங்காது.
அலையடிக்கும் துயரங்களாக அவை
எஞ்சியும் இருக்கலாம்,
எப்பொழுதும்
3. உயிர்களை வளர்ப்பவர்கள்
வழிபாட்டுக்காகவோ
அன்பின் ஆறுதலுக்காகவோ
அவர்கள் உயிர்களை வளர்ப்பவர்கள்
நட்பின் பெயராலும்
போலிச் சமத்துவப் பிம்பத்தாலும்
தங்கள் மனதின் கருமையை
அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளவே அவ்வாறு நடந்து கொண்டார்கள்.
தனிமையின் வெறுமையை நிரப்பவும்
தங்கள் தவறுகளில் இருந்து நழுவிக்கொள்ளவும்
அவர்களுக்கு உயிர்கள் தேவைப்பட்டன.
நல்லவர்கள் போல முகமூடி அணிந்து
காரியங்களைச் சாதித்தபடி
வளர்த்த உயிர்களையெல்லாம்
தங்கள் வன்மத்தின் வடிகாலாகவும்
குற்றங்களை மறைக்கும் கேடயமாகவும்
பயன்படுத்திக் கொண்டார்கள்.
தக்க சமயத்தில் காட்டிக்கொடுக்கவும்
மற்றவர்களை மிரட்டவும்
பயன்படுத்தப்பட்ட அந்த உயிர்கள்
கடைசியில் அனுப்பப்பட்டது என்னவோ பலிபீடங்களுக்கு
இன்னும் தீரவில்லை அவர்களின் பசி
இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வளர்ப்பதற்குப் புதிய உயிர்களை.
நீங்கள் அருகில் போனால்
உங்களையும் கருணையோடு வளர்க்க காத்திருக்கிறார்கள்.
4. மூடப்பட்டவைகளின் பசி
உனதென எஞ்சியிருக்க
ஏதுமில்லை இங்கு,
எல்லாமே திறக்கப்பட்டோ
அல்லது மூடிக்கிடந்தோ
இருக்கின்றன.
வெறுமனே மூடிவிட
முடிவதில்லை எதையும்
திறந்திருப்பதைக் காட்டிலும்
ஒன்றை மூடுவதற்கு
ஒரு பிரத்யேக சாமர்த்தியம் வேண்டியிருக்கிறது
பசி தீர உண்ணவியலாமல்
மூடிவைக்கப்பட்ட இருளுக்குள்
அடங்கி விம்மிக் கொண்டிருக்கிறது
எஞ்சியவர்களின் தீராப் பசி.
என்றேனும் இவ்வுலகில் நீரின்றி
முளைக்கும் பசியும் கூட.
5. அசைவே இயக்கம்
எங்கோ உதிரும்
ஒரு சிறு சருகின் சுழற்சி
நான் விழித்திருப்பதை
எனக்கு உணர்த்துகிறது.
வெயிலில் அசையும் உன் நிழல் தீண்டல்,
முழுப்பகலும் ஓடும் நகரத்து வீதிகள்,
தூரத்து விமானம் வரையும் வெண்கோடு,
நீரில் கரையும் ஒற்றை மேகம்.
எங்கிருந்தோ வந்த இச்சிறு பட்டுப் பூச்சி,
ஜன்னல் கம்பியில் வழியும் மழைத்துளி,
என் காலம் நகர்வதை
மெல்லச் சொல்கிறது.
அலையில்லை எனில்
சமுத்திரம் இல்லை,
அசைவுகளால் மட்டுமே
ஆகியிருக்கிறது உலகம்.
அசைவு உயிர் தருகிறது
இங்குள்ள எதற்கும்,
என்றும் ஒரு பிணத்துக்கு
எந்த அசைவுமில்லை.
அசையும் யானையின் காதுகளில்
பூச்சிகளுக்கு இடமில்லை,
இலை உதிர்ந்த அசைவற்ற மரம்
கைகூப்பிய தியானி.
சுற்றிப் பறக்கும் மரங்கொத்திகளால்
அதன் மனதைக் கொத்த முடியவில்லை,
எனக்கும் உண்டு சிறகுகள்
அசைய அதற்கும் ஓர் ஆகாயம்
*****