தூரிகை: ரவிபேலட்
கவிதை

போர்க் கதவு

அறிவுமதி

“போர்க் கதவு"

-பட்டினப்பாலை-42

மதுரைக்காஞ்சி 354

முற்றுகையிட பகைமன்னர்கள்

வருகிற

செய்தி கேட்டு

மூடித்

தாழ்ப்பாள்

போட்டுக் கொள்கிற

கதவுக்குப்

பெயர்தானே

போர்க்கதவு!

இல்லை

பின்னே?

களம்பாடிய புலவர்களின்

கண்கள்

வழியே போய்

உள்ளத்தில்

படிந்த

ஒரு

கொடிய

காட்சியே

இந்தச் சொல்லை

உருவாக்கியிருக்கிறது.

என்ன காட்சியது?

மோதிக் கொள்ளத்

தயாராக இருக்கும்

இரு

பெரும்படைகள்

போர்

தொடங்குவதற்கு

முன்

காத்திருக்கும்

அல்லவா!

ஆமாம்... சற்று

இடைவெளி

விட்டு

ஒரே ஒழுங்கமைவில்

கட்டளை

ஒலிக்காகக்

காத்திருப்பார்கள்.

போர் தொடங்கலாம்

என்கிற

முரசு முழங்கியதும்

பறவைப் பார்வையில்

இரு படைகளும்

ஒரு

சேரவந்து

மோதிக்

கொள்வார்கள்

இல்லையா!

அந்தக் காட்சியை

அடிக்கடிக்

கண்டதனால்தான்

இரட்டைக் கதவு என்று

இயல்பாய்

சொல்லியிருக்க வேண்டிய

சங்கப் புலவர்கள்

போர்க்

கதவு

என்று

பதிவு செய்திருக்கிறார்கள்!

இரண்டு கதவுகள்

மூடுகிற

காட்சியில்

போரின் தாக்கம்

புலவர்கள் எழுத்தில்

என்ன

செய்திருக்கிறது

பாருங்கள்.