நயன்தாரா - தனுஷ் 
செய்திகள்

நடிகர் தனுஷ் வழக்கு: நெட்ஃபிளிக்ஸ் வழக்கு தள்ளுபடி!

Staff Writer

நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற பெயரில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தியதாகக் கூறி, ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தரப்பில், “திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. படப்பிடிப்பு காட்சிகள் 2020ஆம் ஆண்டே வெளியான போதும், தாமதமாக 2024ஆம் ஆண்டுதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில், “இந்தப் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும் போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்பந்தமிடப்பட்டு, அதில் அவரும் கையெழுத்திட்டுள்ளார். படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.