நடிகை ரோகிணி 
செய்திகள்

‘நான் நடித்த அம்மா கதாபாத்திரங்கள்’– மனம் திறந்த நடிகை ரோகிணி

Staff Writer

தான் நடித்த அம்மா கதாபாத்திரங்கள் குறித்து நடிகை ரோகிணி மனம் திறந்து பேசியுள்ளார்.

‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரோகிணி பேசியதாவது: "இந்தப் படம் ஏன் 'கூடாது' என்பதுதான் படம் எடுப்பதற்கான முதல் காரணம். 'இந்தப் படத்தை மலையாளத்தில் எடுங்க'ன்னு சொன்னபோது, 'இல்ல தமிழ் ஆடியன்ஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு'ன்னு இயக்குநர் இப்படத்தை எடுத்துள்ளார். உரையாடலை குடும்பத்திலிருந்துதான் தொடங்கவேண்டும் என யோசித்து இந்த கதையை எழுதியிருக்கிறார்.

நான் குணச்சித்திர நடிகையாக நடிக்க ஆரம்பித்த பின், இந்த மாதிரியான கேரக்டரில் நடித்ததில்லை. லட்சுமி கேரக்டரை என்னால் சரியாகப் பண்ண முடியுமான்னு நினைத்தேன். எத்தனை எத்தனை கேள்விகள் இந்தச் சமூகத்தில் இருக்கிறதோ, அத்தனை கேள்விகளையும் லட்சுமி மூலமாக இயக்குநர் கேட்க வைத்திருக்கிறார். நான் சமூகத்தின் முகமாக இந்தப் படத்தில் வருகிறேன்.

நான் நிறைய அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். விட்னெஸ், தண்டட்டி, 3 என நான் நடித்த ஒவ்வொரு அம்மா கேரக்டரும் வித்தியாசமானது.

கதாநாயகனுக்கு அம்மாவா நடிக்கவேண்டும் என இயக்குநர் யாராவது கேட்டால், 'அம்மாங்கிறது ஒரு கதாபாத்திரமே கிடையாது. ஹீரோக்கு அம்மா யாரு? கோபமானவங்களா? கஷ்டப்பட்டு வந்தவங்களா? இல்ல கர்வமா பேசுறவங்களா? அவங்களால கதையில் ஏதாச்சும் நடக்குதா?' எனக் கேட்பேன். சில படங்களில்தான் நான் ரொம்ப சரியா நடித்திருக்கிறேன். அதுதான் எனக்கு நிறைவைக் கொடுத்திருக்கிறது. இதில் லட்சுமி கதாபாத்திரமும் ஒன்னு.

இந்தப் படம் பேசும் அரசியலை மீறி, இந்தப் படம் உங்களை என்கேஜ் செய்யும். இங்கேயும் மலையாளப் படங்கள் மாதிரி நல்ல படங்கள் எடுக்க முடியும். அதை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் நாம் நிரூபித்துக் காட்டவேண்டும். எல்லாவற்றையும் விட, பேசாப்பொருளைப் பேசுவதுதான் ஒரு கலையுடைய வேலையே! அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை நாங்கள் செய்திருக்கிறோம்" என்றார்.