அரசியல் தொடர்பான கேள்விகள் தன்னிடம் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கூலி’ திரைப்படத்தில் 70 சதவிகிதம் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என்றார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் ரஜினியிடம் கேள்வி கேட்க முயல, “அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன்” என்று காட்டமாக சொன்னார்.
விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் ‘தலைவா… தலைவா…’ என உரக்கக் கத்த ரசிகர்களை கத்த வேண்டாம் என்றார் ரஜினிகாந்த்.