அண்ணா பல்கலைக்கழகம் 
செய்திகள்

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது!

Staff Writer

தமிழகத்தில் பி.இ., பி.டெக் உட்பட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.

நாளை பன்னிரண்டாம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லாமல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கியிருக்கிறது. இதற்கான விண்ணப்ப்பதிவுக்கான இணையதளங்களும் தொடங்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

மாணவர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டை போலவே 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சேவை மையங்களிலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.