அருள் எம்.எல்.ஏ. 
செய்திகள்

அருள் எம்.எல்.ஏ., பா.ம.க.விலிருந்து நீக்கம் - அன்புமணி நடவடிக்கை!

Staff Writer

பா.ம.க.வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் அருள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அன்புமணி ஆதவரவாளர்களை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்குவதும்,ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து அன்புமணி நீக்குவதும் தொடர் கதையாகி உள்ளது.

அந்தவகையில் ராமதாஸுக்கு ஆதரவாக இருந்ததால் பாமக சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டார். இதனால், பாமக தலைவர் அன்புமணி குறித்த அருள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், பாமக எம்எல்ஏ அருள் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரா. அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாமகவின் அமைப்புச் சட்ட விதியின்படி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (ஜூலை 2) இரா. அருள் நீக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.