தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், நிபந்தனைகளின்படி இணையதளம் (online) வழியாக 19.10.2024 க்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலுள்ள https://www.tnesevai.tn.gov.in ) இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விண்ணப்பங்களை 19.10.2024-க்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் வருவாய்த் துறை கறாராகத் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அல்லது தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான உரிமத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அனுமதியின்றி / உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நேர்வில், தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.