திருச்சி தகவல்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் புதுக் கட்டடம் திறப்பு
திருச்சி தகவல்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் புதுக் கட்டடம் திறப்பு  
வணிகம்

திருச்சியில் ஐ.டி. கட்டடம் திறப்பு- 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

Staff Writer

திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் உள்ள தகவல்தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ.59.57 கோடியில் கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்பக் கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

சென்னை, தலைமைச்செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் இதைத் திறந்துவைத்தார்.

தகவல் தொழில்நுட்பம் - தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழ்நாட்டில் தழைத்து வளரத் தமிழ்நாடு அரசின் கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை  (எல்கோசெஸ்கள்) உருவாக்கி உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) 147.61 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.80.55 கோடி முதலீட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை (எல்கோசெஸ்) உருவாக்கியுள்ளது.

இதில், 1,16,064 சதுர அடி பரப்பளவில் 59.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம், 4 மாடிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பக் கட்டடம் (IT Tower) அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் மூலம் சுமார் 2800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில், சென்னையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், துறையின் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், திருச்சியிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.