தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
முன்னதாக, இன்று காலை 9 மணியளவில், காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு, சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு வருகை தந்தார். அங்கு உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கிருந்த மக்களிடம் மனுக்களை அவர் பெற்றுக்கொண்டதன் மூலம், திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டதோடு, அவர்களிடம் விவரங்களையும் கேட்டறிந்தார். மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்பதால், மக்களிடையே, இந்த திட்டத்துக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களின் குறைகள் 45 நாள்களில் தீர்த்து வைக்கப்படும். இந்த முகாம்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.