மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இருவருக்கும் மாநிலங்களை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இருவரும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
ஏற்கெனவே, திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்பிக்களாக பதவியேற்ற நிலையில் இன்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.