திமுக அரசு கொண்டு வந்துள்ள மாநில பள்ளிக் கல்விக் கொள்கை ஒரு குப்பை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை, 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டுக்கு என தனியாக மாநில கல்விக் கொள்கையை வகுக்க தனியாக குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தது. இந்த மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டார்.
அதில், “தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும். 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறை தொடரும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்” உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த ஆண்டு முதலே மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். ஆனால், மாநில கல்விக் கொள்கைக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , ”3 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் இருந்த மாநில கல்விக் கொள்கை அறிக்கை ஒருவழியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களுக்கு புதிய நிறம் பூசி மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து உள்ளிட்ட சில திட்டங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த திட்டம் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதியரசர் முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை வகுக்க குழு உருவாக்கப்பட்டாலும் கூட, அதில் இடம் பெற்றிருந்த கல்வியாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்ற அவர், வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜுலை மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து கருத்துக்களை கேட்டு திருத்தங்களை மேற்கொண்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டாக அறிக்கை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்தார்.
கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்காத தமிழக அரசு, தன்னிச்சையாக வரைவு அறிக்கையை இறுதி செய்திருக்கிறது என்ற அவர், ஆங்கில வடிவத்திற்கும் தமிழ் வடிவத்திற்கும் பல முரண்பாடுகள் உள்ளன என்று குறிப்பிட்ட அன்புமணி, மாநிலக் கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வித்தரத்தை உயர்த்துவது அல்ல; மாறாக, திராவிட மாடல் அரசின் அரைகுறை செயல்பாடுகளை புகழ்வது தான் என்று விமர்சனம் வைத்தார்.
மேலும், “மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ்க் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெறவே இல்லை. தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக அறிவிக்க திமுக அரசு தவறிவிட்டது. இது தமிழுக்கு திமுக இழைத்த துரோகம். அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது. தாய்மொழியை ஊக்குவிக்காத, தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்காத அனைத்துக் கொள்கைகளும் குப்பைகள் தான். அந்த வகையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையும் ஓர் குப்பைக் கொள்கைதான்” என்றும் அன்புமணி காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.