''பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள்,'' என த.வெ.க. தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது: “ஈரோடு கிழக்கில் எங்களுக்கு குறைந்தது 40 ஆயிரம் ஓட்டுக்கள் வந்திருக்க வேண்டும். முடிவு செய்து 25 ஆயிரத்தோடு நிறுத்தி வைத்துவிட்டார்கள். ஓட்டுக்கு காசு கொடுப்பது குற்றம்தானே. அதனையும், கள்ள ஓட்டுப் போடுவதையும் அனுமதிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குகளை மட்டும் நேர்மையாக எண்ணுவார்களா? ஈரோடு இடைத்தேர்தலில் நான் வைப்புத்தொகை வாங்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது இதோடு போதும் என்று நிறுத்தி விட்டார்கள். பிரச்னையோடும், கண்ணீரோடும், மனுக்களோடும் வீதியில் நின்று போராடும் மக்களோடு நான் கூட்டணியில் இருக்கிறேன். இங்கு எல்லாத் தலைவர்களையும் ஒரு சாதிக் குறியீடாக நிறுத்தி விட்டார்கள் . நான் தமிழ்த் தாயின் பிள்ளையாகவே இருக்கிறேன். என்னையாவது விட்டு விடுங்கள்.
நாட்டை சிறப்பாக ஆட்சி செய்த என் முன்னோர் எல்லோரும் தேர்தல் வியூக நிபுணர்களை வைத்துக் கொள்ளவில்லை. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாடு பற்றி என்ன தெரியும்? தனது நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல், ஏன் இந்த வேலைக்கு வேண்டும்? மேஜையில் உட்கார்ந்து கொண்டு கத்திரிக்காய்... சுரைக்காய்... என்று எழுதி என்ன பயன்?
பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால்தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள்.” இவ்வாறு சீமான் கூறினார்.