ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை, அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதுவரை 6 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக, ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.
அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான மாநகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காவல்துறையினர் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து வேட்பாளர் சீதாலட்சுமி மட்டும் சிறிது தூரம் நடந்து சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்து விட்டு, கார் மூலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுத் தாக்கல் செய்தார்.