நெல் கொள்முதல் 
செய்திகள்

நெல் கொள்முதலைத் தனியாருக்கு விடுவதா?- விவசாயிகள் போராட்டம்!

Staff Writer

நெல் கொள்முதலைத் தனியார்மயமாக்கும் உத்தரவை மாநில அரசு செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வரும் 8ஆம்தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. 

அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கை விவரம்:

”விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை, 1975ல் துவங்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கிராமங்களில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் நிரந்தரக் கட்டடங்களுடன் செயல்படும் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைப்பதற்கான நிரந்தர குடோன்களும் உள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்வதற்கான நவீன அரிசி ஆலைகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை பரவலான கொள்முதல் மூலம் இந்திய உணவுக் கழகத்திற்கு ( FCI ) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொடுத்துவரும் நிலையில், தற்போது ஒன்றிய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் ( NCCF ) மூலம் நெல் கொள்முதல் செய்திட வேண்டுமென மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் நடப்பாண்டில் (2024-25) டெல்டா மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்திட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறோம்.

ஒன்றிய அரசு நிறுவனங்கள் மூலம் நேரடியாக நெல்கொள்முதல் செய்தால், மாநில அரசு வழங்கி வரும் ஊக்கத்தொகையும் நிறுத்தி விடுவார்கள். இது விவசாயிகளை பாதிக்கும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு முழுக்க, முழுக்க ஒரு கூட்டுறவு நிறுவனமோ, பொதுத்துறை நிறுவனமோ அல்ல. இந்தக் கூட்டுறவு இணையமானது இடைத்தரகர்கள், தனியார் வியாபாரிகள், வாகன ஒப்பந்ததாரர்கள் உட்பட்டவர்கள் இடம்பெறும் அமைப்பாகும்.

கொள்முதல் செய்வதற்கான எந்த உட்கட்டமைப்புகளும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு அனுமதியளிப்பது நாளடைவில் நெல்கொள்முதலை முழுக்க முழுக்க தனியார்மயமாக்கும் முயற்சியாகும்.

 
எனவே, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்திட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 8ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று சாமி.நடராஜன் கூறியுள்ளார்.