கஸ்தூரி ரங்கன்  
செய்திகள்

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

Staff Writer

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் பெங்களூரில் இன்று காலமானார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவராக 1994 முதல் 2003 வரை பணியாற்றியவர் கஸ்தூரி ரங்கன் (84). சமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்விலிருந்து வந்தார்.

இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக, அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படும் என்றும், நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். 1994 முதல் 2003 வரை இஸ்ரோவின் தலைவராகவும் செயலாளராகவும் இருந்தார். 2003 முதல் 2009 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை குழுவின் தலைவராகவும் இருந்தார். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.