‘இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது’ என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டப்பட்ட பின்னரே தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும், ஒரு பெண்ணை கடந்த ஒருமாதமாக காதலித்து வருவதாகவும் நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அவரின் திருமணம் அவரின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஷால் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன். மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும்? எங்க அம்மா வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்க அம்மா புடவை கொடுத்தாங்க அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். 2006இல் திமிரு பட சூட்டிங்கின் போது வந்தேன்.19 வருஷம் கழிச்சு இப்ப வந்துள்ளேன். மனசார வேண்டிக் கொண்டேன்.
நடிகர் சங்க கட்டட தாமதத்திற்கு நான் காரணம் இல்லை. இன்னும் நான்கு மாதத்தில் கட்டடம் முடிக்கப்படும்.
இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது. இதை தவிர்த்து இருக்கலாம். நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது.
எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை. மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம் மற்றொன்று உணவு இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள். நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசம் சிரிப்பு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.