நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து குவைத்துக்குச் செல்லும் பிரதமராக மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் பேசுபொருளாக 101 வயதாகும் முன்னாள் வெளியுறவு சேவை அதிகாரி மங்கள் சைன் ஹண்டாவை மோடி சந்தித்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகிவருகிறது.
முன்னதாக, மங்கள் சைன் ஹண்டாவின் நூறாவது பிறந்த நாளுக்காக அவருக்கு பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்து அனுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது பிரதமர் குவைத் சென்றதையொட்டி அவரை நேரில் சந்திக்க வேண்டும் என பிரதமர் அலுவலகத்துக்கு அவரின் பேத்தி சிரேயா ஜுனேஜா தகவல் அனுப்பினார். எக்ஸ் தளத்திலும் பிரதமர் மோடியின் பக்கத்தில் இதுகுறித்து தகவலிட்டிருந்தார்.
உடனடியாக பிரதமர் தரப்பிலிருந்து சிரேயாவின் தாத்தாவைச் சந்திக்க மோடி ஆர்வமாக உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பயணத்தில் இன்று முன்னர் கூறியபடி, மங்கள் ஹண்டாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் இதனால் மிக்க மகிழ்ச்சியும் அன்புமாக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
குவைத் நாட்டுக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்திதான் கடைசியாகச் சென்றிருந்தார். அதன்பிறகு யாருமே செல்லாமல் இருந்தநிலையில், பிரதமர் மோடியின் பயணம் உறுதியானது.