மக்களவை 
இந்தியா

3 மசோதாக்கள்- 12 மணி நேரம் விவாதம் நடக்கும்!

Staff Writer

நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை உட்பட 3 மசோதாக்கள் மீது நாளை மாலைவரை 12 மணி நேரம் விவாதம் நடத்தப்படுகிறது. 

மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கீடு, தொகுதிகள் மறுவரையறை, மாநிலங்கள் அல்லாத ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் தொகுதி வரையறை ஆகியவை தொடர்பாக மக்களவையில் சட்டவரைவுகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

பரபரப்பான சூழலில் அவை இன்று காலையில் தொடங்கியதும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. பின்னர் மசோதாக்களை அறிமுகம் செய்ய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அனுமதி கோரினார். அதற்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற நடவடிக்கைகள் தொடங்கின. அதில் அரசுக்கு ஆதரவாக 207 பேரும், எதிராக 126 பேரும் வாக்களித்தனர்.

அந்த வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, டிவிசன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 251 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மசோதாவை அறிமுகம் செய்யப் போதுமான வாக்குகளைப் பெற்றதால், அமைச்சர் மேக்வால் மசோதாக்களை அறிமுகம் செய்தார்.

இவற்றின் மீது நாளை மாலைவரை 12 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று அமைச்சர் கிர்ரன் ரிஜுஜு தெரிவித்தார். தேவைப்பட்டால் விவாதம் நீடிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.