இந்தியா

ஜார்கண்ட் முதல்வர் வீட்டுக்கு வெளியே 144 தடை உத்தரவு!

Staff Writer

ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல்முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜனவரி 29 முதல் 31-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், சொந்த வேலையாக ஜார்கண்ட் முதல்வர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது இல்லத்தில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் அவரின் சொகுசு காரை நேற்று பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாக இருப்பதாக பா.ஜ.க. எழுப்பிய குற்றச்சாட்டு பதிலளித்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, நாளை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் ஆஜராகவுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்பு கருது 100 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.